போலிஸ் அதிகாரி போன்று ஆள்மாற்றம் செய்த ஆடவருக்கு நான்கு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி அப்பெண்ணும் அவரது ஆண் நண்பரும் புக்கிட் பாஞ்சாங், கங்சா சாலை, புளோக் 173க்கு அருகே உள்ள கூரையுடன் கூடிய நடைபாதையில் மது அருந்திக்கொண்டு இருந்தனர். அப்போது, போதையில் இருந்த இங் சூன் ஹீ, 48, என்ற ஆடவர் அவர்களை அணுகினார்.
அச்சமயத்தில் எஸ்எம்ஆர்டியில் பணியாற்றி வந்த இங், தமது பணியாளர் அட்டையைக் காட்டியபடி, தம்மை ஒரு போலிஸ் அதிகாரி என அடையாளம் காட்டிக்கொண்டார். அவ்விருவரையும் நோக்கிக் கத்திய இங், அவர்கள் அதிக சத்தமிடுகின்றனர் என்றும் இரவு 10.30 மணிக்கு மேல் மது அருந்தக்கூடாது என்றும் கூறினார்.
அத்துடன், அப்பெண்ணின் மார்பகங்கள் குறித்து இழிவாகப் பேசினார் இங். இதனால், ஆடவர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. அப்போது, இருவருக்கும் இடையில் சென்று சமாதானம் செய்ய அப்பெண் முயன்றார். அவரைத் தள்ளிவிட முயன்றபோது, இங் அவரது மார்பகத்தைத் தொட்டதாகக் கூறப்பட்டது. இதைக் கண்டதும் அப்பெண்ணின் காதலர் போலிசை அழைத்தார்.
மறுநாள் நண்பகல் நேரத்தில் இங் கைது செய்யப்பட்டார்.