மறைந்த பிரதமர் லீ குவான் இயூவின் உயில் தொடர்பான விவகாரத்தை 2013ஆம் ஆண்டில் திருமதி லீ சுவெட் ஃபென் (படம்) ஒரு வழக்கறிஞராகக் கையாண்டாரா அல்லது அவரது மருமகளாகக் கையாண்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், மேல்முறையீட்டு நீதிபதி ஜுடித் பிரகாஷ், நீதிபதி வூ பி லீ ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் இன்று நடந்த ஒழுங்குமுறை விசாரணையின்போது, இதுவே வழக்கறிஞர் சங்கமும் திருமதி சுவெட் ஃபென் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர்களின் முன்வைத்த வாதங்களின் மைய அம்சமாகத் திகழ்ந்தது.
அமரர் லீயின் அறிவுறுத்தலின்படி அவரது வழக்கறிஞராக திருமதி சுவெட் ஃபென் நடந்துகொண்டதாகவும் அவரது உயிலைத் தயாரித்து, அதைச் செயல்படுத்தியபோது அமரர் லீயை வழக்கமாகப் பிரதிநிதிக்கும் திருவாட்டி குவா கிம் லீயைத் தவிர்த்துவிட்டதாகவும் வழக்கறிஞர் சங்கம் வாதிட்டது.
தம் கணவரும் அமரர் லீயின் இளைய மகனுமான திரு லீ சியன் யாங் அந்த உயிலின் பலனாளி என்பதால் இது கடமைக்கும் சொந்த நலனுக்கும் இடையிலான முரண்பட்ட அம்சமும்கூட என்று திருவாட்டி கோ சுட்டினார்.
திருமதி சுவெட் ஃபென் தொழில்சார் முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த பிப்ரவரியில் ஒழுங்குமுறை தீர்ப்பாயம் கண்டறிந்ததை நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும் என்று திருவாட்டி கோ கேட்டுக்கொண்டார். திருமதி சுவெட் ஃபென் குற்றமிழைத்ததாக நிரூபணமானால் அவர் வழக்கறிஞராகப் பணியாற்றத் தடை விதிக்கப்படலாம்.
மாறாக, திருமதி சுவெட் ஃபென், அமரர் லீயின் மருமகளாகவே செயல்பட்டார் என்று அவரைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்கள் திரு கென்னத் டானும் திரு வால்ட்டர் மூனும் கூறினர்.
தம் சார்பில் திருமதி சுவெட் ஃபென் செயல்பட அமரர் லீ ஒப்புதல் அளித்திருந்தார் என்பதால் இங்கே கடமைக்கும் சொந்த நலனுக்கும் இடையே எந்த முரணும் எழவில்லை என்றார் திரு மூன்.அதனால், திருமதி சுவெட் ஃபென் மீதான எல்லாக் குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் ரத்து செய்யவேண்டும் என அவ்விருவரும் கோரிக்கை விடுத்தனர்.
இவ்வழக்கில் தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.