மலேசியாவில் கொவிட்-19 பரவலைத் தடுக்கும் கட்டுப்பாடுகளை மீறி நடந்து கொண்ட இந்திய நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.வீட்டில் தனிமையில் தங்க வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் வெளியே வந்ததால் ஏறக்குறைய 12 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்று பெர்னாமா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
மலேசியாவில் வசித்து வரும் திரு நிஸார் முஹமது சபுர் பாட்சா, 57, கெடாவில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.
கடந்த ஜூலை மாதம் இந்தியாவிலிருந்து மலேசியா திரும்பிய அவருக்கு கட்டாயமாக 14 நாட்கள் வீட்டில் தனிமையில் தங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் இதை மீறி அவர் சென்றுள்ளார் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அவர் சிகிச்சை பெறும் கெடா மருத்துவ மனையிலேயே சிறப்பு வழக்கு விசாரணை நடந்தது. அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
இதனால் அேலார் ஸ்டார் நீதிமன்றம் அவருக்கு 12,000 ரிங்கிட் அபராதமும் (S$3,925) ஐந்து மாதச் சிறை தண்டனையையும் விதித்தது.
ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 சோதனையில் அவருக்கு கிருமித்தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது.
இருந்தாலும் 14 நாட்கள் வீட்டில் தங்க வேண்டும் என்று அதிகாரிகள் அவருக்கு உத்தரவிட்டிருந்தனர். ஆனால் அந்தக் காலகட்டத்தில் உணவகத்திற்குச் செல் வதற்காக அவர் வெளியே வந்தார்.
இந்த நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட இரண்டாவது பரிசோதனையில் அவருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் ஏற்கெனவே அவர் வெளியே சென்று வந்ததால் 12 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டது. இதில் குடும்ப உறுப்பினர்கள், உணவக ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோரும் பாதிக்கப் பட்டனர்.
மேலும் இந்தக் கிருமிப்பரவல் மூலம் கெடா, பெர்லிஸ், பினாங்கு உட்பட குறைந்தது மூன்று மாநிலங் களில் தொற்று பரவி 45 பேர் பாதிப்புக்கு உள்ளாயினர். மலேசியா முழுவதும் இதுவரை 9,129 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 125 பேர் உயிரிழந்து விட்டனர்.