சிங்கப்பூர் நிதித்துறையில் உள்ளூர்த் தொழில்நுட்பத் திறனாளர்களையும் புத்தாக்கத்தையும் உருவாக்குவதற்கான திட்டம் துரிதப்படுத்தப்படவுள்ளது.
சிங்கப்பூர் நாணய ஆணையம் அந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்ட செயலாக்கத்தில் $250 மில்லியன் முதலீடு செய்ய கடப்பாடு கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இது பெரிய அளவிலான புத்தாக்கத் திட்டங்களுக்கு இப்போது அரசாங்கம் வழங்கி வரும் ஆதரவுக்கு மேலும் வலுசேர்க்கக்கூடியதாக இருக்கும். அத்துடன் நிதித்துறைக்குத் தேவையான அளவு உள்ளூர்த் தொழில்நுட்பத் திறனாளர்களையும் பெறமுடியும்.
மேம்படுத்தப்பட்ட நிதித்துறை சார்ந்த தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திட்டங்களில் இந்த நிதி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படும் என்று ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் நேற்று அறிவித்தார்.
2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு முன்னதாக ஐந்து ஆண்டுகளுக்கு $225 மில்லியன் முதலீடு செய்யப்பட்டது.
அத்தொகையைவிட 11% அதிகமாக இப்போது முதலீடு செய்யப்படுகிறது.
நிதித்துறைக்கான வளர்ச்சி நிதியில் இருந்து இம்முதலீட்டுத் தொகை பெறப்படுகிறது.
சிங்கப்பூரில் நிதித்துறையில் கையாளப்படும் புத்தாக்கத் திட்டங்களை மேம்படுத்துவது, நடப்பில் உள்ள தொழில்நுட்ப முறைகளை காலத்திற்கேற்ப மாற்றியமைப்பது, இணையப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது ஆகியவை எஃப்எஸ்டிஐ 2.0 எனப்படும் இரண்டாம் கட்ட நிதி ஆதரவுத் திட்டத்தின் இலக்காகும்.
மேம்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில், அதிகபட்சமாக பெறப்படும் நிதி ஆதரவுத் தொகை $400,000க்கு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
தகுதிச்சோதனை அடிப்படையில் தேர்வுபெறும் நிறுவனங்களின் திட்டங்களுக்கு, முன்னதாக வழங்கப்பட்ட 50% நிதி ஆதரவு இப்போது 70% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக ஆணையம் இன்னோர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதிக நிதி ஆதரவு வழங்குவதன் மூலம் நிதித்துறை நிறுவனங்களும் நிதித்துறை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களும் பெரிய அளவிலான திட்டங்களைச் சோதனை செய்து பார்க்கவும் உருவாக்கவும் முடியும் என்றும் ஆணையம் தெரிவித்தது.
புத்தாக்கத் திட்ட நிதி ஆதரவுக்கு விண்ணப்பிப்போருக்கான நிதி ஆதரவு மற்றும் நிதி உச்ச வரம்பு ஆகியவை மதிப்பீட்டுக் குழு அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் வேறுபடும். நிதித் துறைசார்ந்த அனைத்து புதிய திட்டங்களும் தொழிற்கூடம் சார்ந்த பரவலான திட்டங்களும் இந்த நிதி ஆதரவுக்குத் தகுதி பெறக்கூடியவையாகும்.
நிறுவனங்கள் இந்த நிதி ஆதரவின் மூலம் துறை வல்லுநர்களைக் கொண்டு உள்ளூர்த் திறனாளர்களுக்குப் பயிற்சி அளிக்க முடியும்.
மேலும், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி மேம்பட்ட திறன் பயிற்சிகள் பெறுவதற்கும் இந்தத் திட்டம் மூலம் நிதி ஆதரவு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.