கொவிட்-19 கொள்ளைநோய் நெருக்கடி காலத்திலும் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) வேலைப் பாதுகாப்பு மன்றம் 20,000க்கு மேற்பட்ட ஊழியர்களை புதிய வேலைகளுடனும் புதிய பொறுப்புகளுடனும் இணைத்துள்ளது என்று என்டியுசியின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு ஜூன் மாதத்தில் அந்த மன்றம் மேற்கொண்ட வேலை இணைப்பு நடவடிக்கையுடன் ஒப் பிடுகையில் இது இரண்டு மடங்கு அதிகம். இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் தோற்றம் கண்ட என்டியுசியின் வேலைப் பாதுகாப்பு மன்றம், வேலை இழந்தவர்களுக்கும் வேலையிழக்கும் அபாயமுள்ளவர்களுக்கும் புதிய வேலைகள் மற்றும் தற்காலிக வேலைகள் கிடைக்க வழி செய்துள்ளது.
இந்த மன்றத்தில் அங்கம் வகிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 7,000ஆக இருந்தது. அது இப்போது 9,000ஐக் கடந்து விட்டது என்று கூறினார் திரு இங்.
“இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் வேலையிழந்த ஊழியர்களுக்குப் பொருத்தமான வேலைகளைப் பெற்றுத் தந்ததில் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றும் திரு இங் விவரித்தார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு நேற்று அளித்த சிறப்பு நேர்காணலில் பேசிய திரு இங், வேலைப் பாதுகாப்பில் இன்னும் அதிக கவனம் செலுத்த மன்றம் உறுதியுடன் இருக்கிறது என்றும் அதேவேளையில் ஊழியர்களின் குறிப்பாக குறைந்த சம்பளம் ஈட்டும் ஊழியர்களின் நல்வாழ்வு கவனித்துக் கொள்ளப்படும் என்றும் கூறினார்.
கிடைக்கப்பெற்ற கருத்துகளின் அடிப்படையில், அடுத்த ஆறு முதல் 12 மாதங்களுக்கு வேலையிழப்புகள் அதிகரிக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகக் கூறும் திரு இங், கொள்ளைநோயால் ஏற்பட்ட பொருளியல் தாக்கம் இப்போது சமூகத்தில் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது என்றும் சொன்னார்.
ஆக, வேலைகளைப் பேணுவது, ஊழியர்களைப் பாதுகாப்பது, ஆட்குறைப்பு நிகழுமானால் வேலை இணைப்பு போன்ற ஊழியர்களுக்குத் தேவைப்படும் பராமரிப்பும் ஆதரவும் வழங்குவது ஆகியவைதான் வேலைப் பாதுகாப்பு மன்றத்தின் முன்னுரிமைகள் என்றும் வலியுறுத்தினார் திரு இங்.
“வேறு வழியின்றி ஆட்குறைப்பு மேற்கொள்ளப்பட்டால், அது நியாயமாக நடத்தப்பட வேண்டும். அதை உறுதி செய்யத்தான் என்டியுசி நியாயமான ஆட்குறைப்பு கட்டமைப்பை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது.
“ஊழியரணியில் பிரதான பங்கு வகிக்கும் சிங்கப்பூரர்களைப் பாதுகாப்பது, சிறப்பு அல்லது மிக முக்கிய திறன்களைக் கொண்டிருக்கும் வெளிநாட்டினரை வேலையில் தக்க வைத்துக்கொள்வது ஆகியவையும் கட்டமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன,” என்றும் திரு இங் விளக்கினார்.
என்டியுசி நியாயமான ஆட்குறைப்பு கட்டமைப்பை உருவாக்க சில மாதங்கள் ஆனாலும், கடந்த மாதம் விமான பழுதுபார்ப்பு நிறுவனமான ஈகிள் சர்வீசஸ் ஏஷியா நியாயமற்ற ஆட்குறைப்பு நடவடிக்கைக்குத் திட்டமிட்டுக்கொண்டிருந்தது.
அதன் தொடர்பில் அந்நிறுவனத்துக்கும் தொழிற்சங்கத்துக்கும் இடையே பதற்றமான பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் என்டியுசி தனது நியாயமான ஆட்குறைப்பு கட்டமைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டது.
அந்நிறுவனத்துக்கு எதிராக தொழில்துறை சார்ந்த சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஊழியர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்த மூன்று தொழிற்சங்கங்களை திரு இங் கேட்டுக்கொண்டுள்ளார்.
“ஊழியர்கள் வேலையிடத்தை விட்டு வெளியேற பணிக்கப்பட்டுள்ளனர். பேச்சுவார்த்தை நடப்பில் இருக்கும்போதே அந்நிறுவனம் அவ்வாறு செய்துள்ளது. மேலும் அது குறித்து தொழிற்சங்கத் தலைவருக்கும் நேரடியாகத் தெரிவிப்பதற்குப் பதிலாக காணொளி பதிவு மூலம் தெரிவித்தது. இது நம்பிக்கையைப் போக்கும் செயலாகக் கருதப்படுகிறது. இது குறித்து அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம்,” என்றும் திரு இங் விளக்கமளித்தார்.