இம்மாத முதல் பாதியில் இரண்டு மூன்று நாட்களுக்கு சிங்கப்பூரின் பல பகுதிகளில் நாள்தோறும் காலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் கடந்த மாத இறுதியில் அறிவித்தது.
இரவில் பொதுவாக 28 டிகிரி செல்சியஸ் என்று சற்று வெப்பமாக இருக்கும் என்றும் முன்னுரைக்கப்பட்டது.
அதன்படி நேற்றுக் காலை தீவின் பல பகுதிகளில் காலையில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்தது.
கடும் மழை காரணமாக நேற்று சில இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இருப்பினும் அது விரைவில் வடிந்துவிட்டது.
அவற்றில் ஒன்றான தஞ்சோங் பகார் ரோடு, கிரேக் ரோடு சாலைச் சந்திப்பில் நேற்றுக் காலை 10 மணிக்கு திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
உடனே அங்கு விரைந்த பொதுப் பயனீட்டுக் கழகத்தின் அதிகாரிகள் வெள்ளம் வடிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதனால் சுமார் பத்து நிமிடங்களில் அங்கு வெள்ளம் வடிந்து அந்தச் சாலைப் பகுதி போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டது.
மேலும் அல்ஜுனிட் ரோட்டில் அதாவது தீவு விரைவுச்சாலையின் மேம்பாலச் சாலைக்குக் கீழ் 50 மில்லிமீட்டர் ஆழத்துக்கு தண்ணீர் தேங்கிக் கிடந்தது என்றும் பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்று தனது அறிக்கையில் தெரிவித்தது.