கொவிட்-19 நடவடிக்கைகளை மீறியதற்காக குற்றம் சாட்டப்பட்டு பின்னர் பிணையில் வெளிவந்த 30 வயது திரு குமரன் ரோய் ராஜேந்திரன், தனது பாதுகாவல் வேலையின்போது மது அருந்திவிட்டு, போலிசாரைத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்தக் குற்றங்களுக்காக திரு குமரனுக்கு நேற்று ஒரு வாரச் சிறை, $4,700 அபராதம் விதிக்கப்பட்டது.
ஏப்ரல் 18ஆம் தேதி குமரன் காமன்வெல்த் கிரசெண்ட் சந்தைக்கு முகக்கவசம் அணியாமல் தன் சட்டையைக் கொண்டு வாயை மூடிக்கொண்டு சென்றார். எஸ்ஜி தூய்மை தூதர்கள் முகக்கவசம் அணியும்படி அவரிடம் கூறியும் அவர் கேட்கவில்லை. உணவுக் கடைக்காரரும் அவருக்கு உணவு கொடுக்க மறுத்துவிட்டார்.
கோபமடைந்த குமரன் அந்தத் தூதர்களில் ஒருவரைத் திட்டிய பிறகு மற்றொருவரைத் தள்ளி விட்டார். போலிஸ் அழைக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது நாட்கள் கழித்து மே 24ஆம் தேதி குமரன் அதிகாலை 3 மணிக்கு மது வாங்குவதற்கு தன் வேலையிடத்தை விட்டு சென்று குடித்துவிட்டு, போதையில் விழுந்து கிடந்தார். பின்னர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குமரனிடம் உடமைகள் இல்லாததால் அங்கு அழைக்கப்பட்ட போலிஸ் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுத்ததுடன் அவர்களையும் திட்டியுள்ளார்.

