உள்ளூரில் தொழில்கள் தலைதூக்குவதற்கு உதவும் ஓர் இயக்கத்தின் பகுதியாக சிங்கப்பூரர்களுக்கு ‘சுற்றுலா ஊக்கத்தொகை’ என்ற வடிவில் $320 மில்லியன் கிடைக்கவிருக்கிறது. அந்தத் தொகையை அவர்கள் உள்நாட்டில் செலவிட முடியும்.
‘சிங்கப்பூரை மீண்டும் கண்டறி வதற்கான பற்றுச்சீட்டுகள்’ என்று அந்தத்தொகை குறிப்பிடப்படும்.
சிங்கப்பூரில் செயல்படும் உணவகங்கள், கடைகள், ஹோட்டல்கள், உல்லாச இடங்கள் ஆகியவற்றில் மக்கள் செலவிடுவதை ஊக்குவிப்பதற்காக சென்ற மாதம் $45 மில்லியன் இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டது.
செலவின ஊக்குவிப்புகளும் உள்ளூர் ஊழியர்களுக்கு மேலும் ஏழு மாதம் கிடைக்கவிருக்கும் சம்பள மானியமும் சுற்றுலாத் துறைக்கு மேலும் ஆதரவு அளிப்பதற்காக இடம்பெறும் நடவடிக்கைகளும் முக்கியமானவையாகும்.
கொவிட்-19 காரணமாக நடப்புக்கு வந்துள்ள பயணக் கட்டுப்பாடுகளால் சிங்கப்பூருக்கு வெளிநாட்டினர் வருகை அறவே இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது என்பதை தன்னுடைய அமைச்சர்நிலை அறிக்கையில் துணைப் பிரதமர் சுட்டினார்.
பல சிங்கப்பூரர்கள் பயணம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் முடியவில்லை. அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது செலவிடும் அளவுக்கு சிங்கப்பூரில் செலவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்றாலும் புதிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு சிங்கப்பூரர்கள் உள்நாட்டின் கலாசாரம், பாரம்பரியம், இயற்கை, கலைகள், கட்டடக் கலை முதலான பலவற்றையும் கண்டறிவார்கள் என்று நம்புவதாக திரு ஹெங் கூறினார்.
பற்றுச்சீட்டுகள் பற்றிய மேல் விவரங்கள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.
கலை, கலாசார விளையாட்டு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு மேலும் உதவி கிடைக்கக்கூடும் என்றார் அவர். பல ஆண்டு காலமாக நாம் பலப்படுத்தி வந்துள்ள மூலாதார ஆற்றலைக் கட்டிக்காக்கும் வகையில் மேலும் ஆதரவை வழங்க தான் ஆயத்தமாக இருப்பதாகவும் கலாசார, சமூக இளையர் துறை அமைச்சுடன் சேர்ந்து இதனை தாம் செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
இரவு நேர உல்லாச தொழில்துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு உதவுவதன் தொடர்பில் வர்த்தக தொழில் அமைச்சு மேல் விவரங்களை வெளியிடும்.