வேலை ஆதரவுத் திட்டம் திடீர் ஆட்குறைப்பைத் தவிர்த்து சிங்கப்பூரர்களுக்கு உதவும் என்பதால் குறிப்பாக அந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட புதிய ஆதரவு தொகுப்புத் திட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கிறது என்று அதிபர் ஹலிமா யாக்கோப் குறிப்பிட்டார்.
வேலை ஆதரவுத் திட்டத்தை தாக்குபிடிக்கக்கூடிய வகையில் நன்கு திட்டமிட்டு நீட்டித்து இருப்பதன் காரணமாக திடீர் ஆட்குறைப்புகள் குறையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கொவிட்-19 காரணமாக நிச்சயமில்லாத நிலைகளும் பெரும் சவால்களும் தொடர்ந்து இருந்து வருகின்றன.
இந்தச் சூழலில் ஐந்தாவது ஆதரவுத் திட்டம் ஒன்றைத் தாக்கல் செய்ய அரசாங்கம் செய்துள்ள முடிவு பற்றி துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தனக்கும் அதிபர் ஆலோசனை மன்றத்திற்கும் விளக்கம் அளித்ததாக திருவாட்டி ஹலிமா நேற்று ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார்.
வேலை ஆதரவுத் திட்டம் நீட்டிக்கப்பட்டு இருப்பதால் நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் தொடர்ந்து ஆதரவு கிடைக்கும் என்பதை அதிபர் சுட்டினார்.
இருந்தாலும் இத்தகைய ஆதரவின் காரணமாக ஒவ்வொரு நிறுவனத்தையும் காப்பாற்றிவிட முடியாது என்று அதிபர் எச்சரித்தார்.