சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, பல நவீன, அறிவார்ந்த தொழில்நுட்பங்களைச் சென்ற வாரம் அறிமுகப்படுத்தியது.
அவற்றில் பயிற்சியாளர் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட பிரத்யேகமான அறிவார்ந்த கடிகாரம் ஒன்று. அந்தக் கடிகாரம், ஒருவர் பயிற்சியில் ஈடுபடும்போது அவர் எங்கே இருக்கிறார், அவரின் இதயத் துடிப்பு எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் கண்காணிக்கும்.
பயிற்சியாளருக்கு அதிக களைப்பு ஏற்படும்போது அது பற்றி அந்தக் கடிகாரம் எச்சரிக்கை அறிகுறியை மேல் அதிகாரிகளுக்கு அனுப்பும். இந்தக் கருவியைப் பயிற்சியாளர்கள் கடந்த ஜூலை முதல் பரிசோதித்து வருகிறார்கள்.
இந்தப் பரிசோதனை மூலம் தெரிய வரும் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படும். குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த ஒரு குழு அவற்றை அலசி ஆராய்ந்து பயிற்சி செயல்திறனை கூடுமான வரை அதிகப்படுத்தும் என்று மேஜர் ஹாசன் குத்தூஸ் தெரிவித்தார்.
மேஜர் குத்தூஸ், குடிமைத் தற்காப்புப் பயிலகத்தில் உள்ள சேவை யாளர் செயல்திறன் நிலையத்தின் தற்காலிக தலைவராக இருக்கிறார்.
இந்தப் புதிய தொழில்நுட்பம் காரணமாக அதிகாரிகளுக்கு மன உளைச்சலும் பணியும் குறையும். பயிற்சியாளரை கருவியே கண் காணிக்கும் என்பதால் அதிகாரிகள் கண்காணித்துக்கொண்டே இருக்கவேண்டிய தேவை இராது என்று உள்துறைக் குழுவின் அறிவியல் தொழில்நுட்ப முகவையைச் சேர்ந்த யிங் மெங் ஃபாய் தெரிவித்தார். இவர் மனித வளம் மற்றும் பாவனை ஆற்றல் நிலையத்தின் தற்காலிக இயக்குநராக இருக்கிறார்.
அறிவார்ந்த இந்தக் கடிகாரங்கள், பயிற்சியாளர் ஒவ்வொரு வருக்கும் ஏற்ற முறையில் உருவாக்கப்பட்டு இருக்கும்.
இவற்றில் போகப்போக புதிய புதிய அம்சங்கள் சேர்க்கப்படும். சேவையாளர் வருகைப் பதிவு போன்றவை புதிய அம்சங்களில் அடங்கும். இவை அறிவார்ந்த பொங்கோல் தீயணைப்பு நிலையத்தில் சேவையாளர்களுக்கு அறி முகப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்படும். புதிதாக அமைய இருக்கும் அந்த தீயணைப்பு நிலையம் அதி நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும்.
இதோடு, உள்துறைக் குழு அறிவியல் தொழில்நுட்ப முகவையுடன் சேர்ந்து ஆய்வு உருவாக்கப் பரிசோதனைக் கூடம் ஒன்றை குடிமைத் தற்காப்புப் படை நிர்மாணித்து வருகிறது. அறிவார்ந்த தொழில்நுட்பங்கள் எல்லாம், குடிமைத் தற்காப்புப் படை உருமாற்றத்தில் உயிர்நாடியானவை என்று இந்தப் படையின் எதிர்கால தொழில்நுட்பம் மற்றும் பொதுப் பாதுகாப்புப் பிரிவின் துணை ஆணையர் டியோங் ஹோவ் ஹுவா தெரிவித்தார்.

