புதிய தனியார் வீடுகள் விற்பனை அதிகரிப்பு

புதிய தனியார் வீடுகள் விற்பனை அதிகரிப்பு

2 mins read
fc18f72e-cd53-4c9a-9588-c0dacb06328d
தெம்பனிஸில் நடந்த ஒரு சொத்து விற்பனைக் காட்சிக் கூடம். படம்: சிம் லியன் லேண்ட் -

கொவிட்-19 கிருமிப்பரவல் காரணமாக சிங்கப்பூரின் பொருளியல் வீழ்ச்சியடைந்துள்ளது. இருந்தாலும் புதிய வீடுகளின் விற்பனை குறைந்தபாடில்லை.

கடந்த மூன்று மாதங்களாக புதிய வீடுகளின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் தரைவீடுகள் அல்லாத 1,080 தனியார் வீடுகள் விற்கப்பட்டன.

இது, ஜூன் மாதம் விற்கப்பட்ட 998 தனியார் வீடுகளுடன் ஒப்பிட்டால் 8.2 விழுக்காடு உயர்வாகும். ஆனால் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் பார்த்தால் வீட்டு விற்பனை 8.4 விழுக்காட்டுக்குச் சரிந்துள்ளது.

சீனர்கள் அனுசரிக்கும் ஆவிகளை பசியாற்றும் மாதம் நாளை (ஆகஸ்டு 19) தொடங்குகிறது.

அதற்கு முன்னதாக ஏராளமான தனியார் வீடுகளை சொத்து மேம்பாட்டாளர்கள் விற்பனைக்கு வெளியிட்டனர்.

சொத்து மேம்பாட்டாளர்கள், ஜூைலயில் மட்டும் 869 புதிய வீடுகளை விற்பனைக்கு வெளியிட்டனர்.

இது, இதற்கு முந்தைய ஜூன் மாதத்தில் விற்பனைக்கு வெளியிடப் பட்ட 597 புதிய வீடுகளுடன் ஒப் பிடுகையில் 46 விழுக்காடு கூடுதலாகும்.

இருப்பினும் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் ஓராண்டுக்கு முன்பு விற்பனைக்கு வந்த 911 வீடுகளுடன் ஒப்பிட்டால் குறைவே.

வீட்டு விற்பனை பற்றிய அண்மைய நிலவரத்தை நகர மறுசீரமைப்பு ஆணையம் நேற்று வெளியிட்டது. ஆனால் இவற்றில் எக்சிகியூட்டிவ் கொண்டோமினிய வீடுகள் என்று அழைக்கப்படும் பொது-தனியார் வகையைச் சேர்ந்த வீடுகள் சேர்க்கப்படவில்லை.

எக்சிகியூட்டிவ் கொண்டோமினிய வீடுகளையும் சேர்த்தால் கடந்த மாதம் மொத்தம் 1,142 தனியார் வீடுகள் விற்கப்பட்டுள்ளன.

தெம்பனிசில் உள்ள டிரஷர், பார்க் கிளெமடிஸ், த ஃபுளோரன்ஸ் ரெசிடன்சஸ், ஜேட்ஸ்கேப், டெ யின்ட்ரி ரெசிடன்ஸ் ஆகிய வீடுகள் அதிகம் விற்கப்பட்டதாக ஆணையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.