இலேசான தொற்றை ஏற்படுத்தவல்ல புதுவகை கொவிட்-19 கிருமியை சிங்கப்பூர் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த விவரம் புகழ்பெற்ற ‘தி லான்செட்’ மருத்துவ சஞ்சிகையில் வெளியாகி இருக்கிறது.
இந்தக் கண்டுபிடிப்பு, தடுப்பூசி மற்றும் சிகிச்சை முறையில் புதிய வழிமுறைகளுக்கு வித்திட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தப் புதுவகை கொவிட்-19 கிருமி, கொரோனா நோய்ப் பரவல் தொடங்கிய சீனாவின் வூஹான் நகரில் இருந்து சிங்கப்பூருக்கும் தைவானுக்கும் வந்தது என்று தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையம், டியூக்- என்யுஎஸ் மருத்துவப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு நிலையங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இங்கு உருவான ஒரு கொரோனா தொற்றுக் குழுமத்தில் அந்தப் புதுவகை கிருமி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ‘382 நியூக்ளியோடைடு’ என்ற மரபணுக்கூறு அகற்றப்பட்டிருந்தது.
இந்தப் புதுவகைக் கிருமியால் பாதிக்கப்பட்டோரில் குறைந்த விகிதத்தினருக்கு மட்டுமே உடலில் உயிர்வாயுப் பற்றாக்குறை ஏற்பட்டு, செயற்கைச் சுவாசம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எட்டுப் பேரில் இந்தப் புதுவகை கிருமி காணப்பட்டதாகச் சொல்லப்ப்பட்டது. கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு அந்த ‘382’ வகை கொரோனா கிருமி கண்டறியப்படவில்லை என்று ‘லான்செட்’ ஆய்வு கூறுகிறது.
நோயின் தாக்கத்தில் மரபணு மாறுபாடுகள் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்பதை இந்த ஆய்வு உணர்த்துவதாக உள்ளது எனக் குறிப்பிட்டார் சிங்கப்பூர் ஜீனோம் நிலையத்தின் முன்னாள் தலைவரும் அமெரிக்காவில் உள்ள ‘தி ஜாக்சன்’ ஆய்வுக்கூடத்தின் இப்போதைய தலைவருமான பேராசிரியர் எடிசன் லியூ.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சா சுவீ ஹோக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் நோய்த் தொற்றியல் நிபுணரும் இணைப் பேராசிரியருமான சு லீ யாங் கூறுகையில், “கொவிட்-19 கிருமி தொடர்ந்து பரவினால் மரபணுக்களில் திடீர் மாற்றங்கள் நிகழலாம். பெரும்பாலான நேரங்களில் அந்த திடீர் மாற்றங்கள் கிருமியின் பரவல்தன்மையில் சிறிய அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்தும்,” என்றார்.
அரிதாக ஒரு சில சம்பவங்களில், கிருமி பரவுவதை அவை எளிதாக்கிவிடும் என்றும் கிருமியை அபாயமிக்கதாக அல்லது குறைந்த அபாயமுடையதாக மாற்றிவிடும் என்றும் திரு யாங் குறிப்பிட்டார்.
இப்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ள கொவிட்-19 கிருமி வகையானது குறைந்த அபாயமுடையது தான் என்றும் அவர் சொன்னார்.