சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருப்பது அடுத்த சில மாதங்களில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் முன்னுரிமையாக இருக்கும் என்று கூறியுள்ளார் அமைச்சர் கிரேஸ் ஃபூ. அடுத்த மூன்று முதல் ஆறு மாதத்திற்குள் புதிய சட்டம் இயற்றப்படும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கும் டெங்கிக்கும் எதிரான சிங்கப்பூரின் போராட்டம் பொது சுகாதாரம், நோய்க் கட்டுப்பாடு, சுத்தமான கழிப்பிடம், தரமான நீர், பாதுகாப்பான உணவு போன்ற அம்சங்களின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதாக இன்று அமைச்சர் தெரிவித்தார்.
"இவையெல்லாம் வாழ்க்கையின் முக்கியமான அடிப்படை தேவைகள் என்பதால் நாம் இலேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நான் அதற்கான முயற்சியை எடுக்க விரும்புகிறேன்," என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் கலந்துகொள்ளும் முதல் மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் திருவாட்டி கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.
சுற்றுப்புற பொது சுகாதார சட்டத்தில் இயற்றப்படும் மாற்றங்களில் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஆராயப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். குறிப்பாக பாலர் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு போன்ற அபாயத்திற்குரிய பயனீட்டாளர்களை மையமாகக் கொண்ட அம்சங்களில் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.
பொது சுகாதார தரத்தை மேம்படுத்த எந்தெந்த வகையில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்பது குறித்தும் தமது அமைச்சு ஆராயும் என்று சொன்னார் அமைச்சர்.