வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலிருந்து தங்களின் இல்லப் பணிப்பெண்ணைத் துன்புறுத்திய மாது ஒருவருக்கு 21 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பின்னர் தம் மனைவியான 39 வயது ஃபர்ஹா தெஹ்சீனுடன் சேர்ந்து 27 வயது இந்திய நாட்டவரான அமன்தீப் கோர் எனும் பணிப்பெண்ணைத் துன்புறுத்திய அவரது கணவரான 41 வயது முகம்மது தஸ்லீமுக்கு நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொடுக்கப்படும் வேலைகளைச் சரிவர செய்யாததால், ஃபர்ஹா 2016ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் திருவாட்டி அமன்தீப்பைத் தாக்கியதுடன் அவரைக் கழி கொண்டு அடிப்பதாகவும் மிரட்டியுள்ளார் என்றும் இரு முறை ஃபர்ஹா, அமன்தீப்பை குத்தியதுடன் உதைத்தார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்ற விசாரணையில் அமன்தீப்பை ஒன்பது முறை ஃபர்ஹா தாக்கியுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட நீதிபதி ஸைஃபுதின் சருவான் இவ்வாண்டு ஜூன் 9ஆம் தேதியன்று கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் இந்திய நாட்டவர்கள் என்றும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கொடுமைப்படுத்தப்பட்ட பணிப்பெண்ணுக்கு ஃபர்ஹா $4,500ஐயும் அவரது கணவர் $1,000யும் இழப்பீடாகத் தர வேண்டும் என்றும் நேற்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இரு மகன்களுக்குத் தாயான திருவாட்டி அமன்தீப், 2016ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி முதல் ஃபர்ஹாவின் வீட்டில் பணிப்பெண் வேலையைத் தொடங்கினார்.
வார நாட்களில் கொடுக்கப்படும் வேலைகளை முடித்துவிட்டு திருவாட்டி அமன்தீப் அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்குத் தூங்கச் செல்வார் என்றும் இரண்டு மணி நேரம் கழித்து அவர் எழுந்து விடுவார். வாரயிறுதியில் அவர் காலை 7.30 மணிக்கு எழுந்து விடுவார்.
வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலிருந்தே ஃபர்ஹா தம்மைக் கொடுமைப்படுத்தியதாக அமன்தீப் விசாரணையின்போது தெரிவித்தார்.
"ஏன் என்னை முரட்டுத்தனமாக நடத்துகிறீர்கள்," என்று அமன்தீப், ஃபர்ஹானிடம் கேட்க, "நான்தான் உன்னை இங்கு வரவழைத்தேன். உன்னை எப்படி நடத்த வேண்டும் என்பது என் விருப்பம்," என்று பதிலளித்துள்ளார்.
மேலும், தம் கணவருடன் தகாத உறவு வைத்துள்ளார் என்று குற்றம் சுமத்தியும் ஃபர்ஹா பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்தினார் என்றும் முதலில் அமன்தீப்பிடம் அன்பாகப் பழகிய தஸ்லீமும் பின்னர் அவரிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளத் தொடங்கினார் என்றும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
"சொல்லப்படும் வேலைகளை முறையாகச் செய்யவில்லை என்றால் உன்னை சன்னலிருந்து கீழே தள்ளிவிடுவோம். யாராவது கேட்டால் உனக்கு மனநிலை சரியில்லை. நீயாக சன்னலிலிருந்து குதித்து விட்டாய் என்று சொல்லி விடுவோம்," என்றும் ஃபர்ஹா மிரட்டியுள்ளார் என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சொன்னார்.
அவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்றதும், ரிவர்வேல் கிரசென்ட் புளோக்கின் நான்காம் மாடி வீட்டிலிருந்து அமர்தீப், சன்னலுக்கு வெளியே உள்ள விளிம்பில் நின்று தப்பிக்க முயன்றார்.
அதைப் பார்த்த அங்கு சாயம் பூசும் வேலை செய்த மணி மனோகரன் எனும் வெளிநாட்டு ஊழியர் தனது பணிமேடையின் மூலம் அவரைக் காப்பாற்றி கீழே கொண்டு வந்தார்.
பின்னர் அமன்தீப் குட் ஷெப்பர்ட் சென்டர் இல்லத்தில் வைக்கப்பட்டார்.
தங்கள் தண்டனையை எதிர்த்து தம்பதி இருவரும் மேல் முறையீடு செய்யவிருப்பதால் ஃபர்ஹாவுக்கு 15,000 வெள்ளியும் தஸ்லீமுக்கு 8,000 வெள்ளியும் பிணை அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

