பிடிஓ எனப்படும் தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் வீடுகளை உள்ளடக்கிய 89 கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கி இருக்கின்றன என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று அறிவித்தார்.
அத்தகைய வீடுகள் மொத்தம் 90 இடங்களில் கட்டப்பட்டு வருகின்றன. ஒரே ஒரு திட்டத்திற்கு மட்டும் இனிமேல்தான் கட்டட, கட்டுமான ஆணையம் அங்கீகாரம் வழங்க வேண்டும்.
இவ்வேளையில், பாதுகாப்பான முறையில் பணிகளை மீண்டும் தொடங்குவதன் தொடர்பில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அந்தத் திட்ட ஒப்பந்த நிறுவனத்துடன் செயல்பட்டு வருகிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
இன்னமும் அங்கீகாரம் பெறாமல் இருக்கும் கட்டுமான இடம் பற்றிய விவரத்தை இந்தக் கழகம் வெளியிடவில்லை.
சிங்கப்பூரில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து ஜூன் 2ஆம் தேதி முதல் கட்டுமானப் பணிகள் படிப்படியாகத் தொடங்கி இருக்கின்றன.
இருந்தாலும் வேலை இடங்களில் பாதுகாப்பு நியதிகளைக் கட்டுமான நிறுவனங்கள் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டிய நிலை இருக்கிறது.
மனிதவளப் பற்றாக்குறை, கட்டுமான சாதனங்கள் கிடைப்பதில் உள்ள பிரச்சினைகள் ஆகியவை காரணமாக சில பிடிஓ திட்டங்கள் சுமார் ஆறு மாதம் முதல் ஒன்பது மாதம் வரை தாமதமாகக் கூடும் என்று ஏற்கெனவே வீவக கூறியது.
இந்தக் கால அளவில் இப்போதைக்கு மாற்றமில்லை என்றாலும் தாமதத்தைக் குறைப்பதற்கான வழிகளைக் கழகம் தொடர்ந்து ஆராய்ந்து வரும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சும் வீவகவும் கூட்டறிக்கையில் தெரிவித்தன.
இதனிடையே, அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று செஞ்சா வேலி கட்டுமான இடத்திற்குச் சென்று அங்கு கடைப்பிடிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டார்.
பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் ஒப்பந்த நிறுவனங்கள் கூடுதல் முயற்சியை எடுத்து வருகின்றன. இதற்காக அந்த நிறுவனங்களுக்கு அமைச்சர் ஃபேஸ்புக் பக்கத்தில் பாராட்டு தெரிவித்தார்.
இவ்வேளையில், பிடிஓ திட்டப் பணிகள் எப்போது முடிவடையும் என்பது பற்றி அப்போதைக்கு அப்போது வீடு வாங்குவோருக்குத் தகவல் தெரிவிக்கப்படும் என்று வீவக குறிப்பிட்டுள்ளது.

