ஒருவரை ஏமாற்றி அவருடைய சொந்த தகவல்களைத் தந்திரமாகத் தெரிந்துகொள்ள முயலும் மோசடி மின்னஞ்சல்கள் சிங்கப்பூரில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க இணைய மிரட்டலாக இருந்து வருகின்றன.
அத்தகைய மின்னஞ்சல்களைப் போலியானவை என்று அடையாளம் காணும் ஆற்றலுடன் கூடிய சிங்கப்பூரர்கள் மிகவும் குறைவு என்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்து இருக்கிறது.
அந்த ஆய்வை சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவை நடத்தியது. இணையம் மூலம் நடத்தப்பட்ட அதில் 1,000 பேர் கலந்துகொண்டார்கள்.
அவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், ஒருவரின் தனிப்பட்ட விவரங்களை தெரிந்துகொள்ள மின்னஞ்சல் மூலம் நடக்கும் மோசடி குறித்து தங்களுக்குத் தெரியும் என்று குறிப்பிட்டனர். ஆனால் அத்தகைய மின்னஞ்சல்களை அடையாளம் கண்டவர்கள் சுமார் 40 பேர் மட்டுமே என்பது ஆய்வு மூலம் தெரியவந்தது.
ஆய்வில் கலந்துகொண்டவர்களிடம் மொத்தம் எட்டு மின்னஞ்சல்கள் காட்டப்பட்டன. அவற்றில் ஆறு மின்னஞ்சல்கள் மோசடி மின்னஞ்சல்கள்.
சந்தேகத்திற்கிடமான பிற்சேர்க்கைகளைக் கொண்ட மின்னஞ்சல்களை அடையாளம் கண்டுவிடக்கூடிய ஆற்றலுடன் இருந்தவர்கள் 57 விழுக்காட்டினர்.
ரகசிய விவரங்களைத் தெரிந்துகொள்ளும் நோக்கத்தில் தில்லுமுல்லு ரீதியில் கோரிக்கை விடுக்கும் மின்னஞ்சல்களைத் துல்லியமாக அடையாளம் காணும் திறமை 53 விழுக்காட்டினரிடம் இருக்கிறது.
சிங்கப்பூரில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் மார்ச் மாதத்துக்கும் இடையில் வங்கிகளின் பெயரில் இடம்பெற்ற மோசடிகளில் 374 பேர் குறைந்தபட்சம் $1.6 மில்லியன் பணத்தை இழந்து இருக்கிறார்கள் என்பது போலிஸ் புள்ளிவிவரம் மூலம் தெரியவருகிறது.
தந்திரமாக மோசடி செய்து ஒருவரின் ரகசிய தகவல்களைத் தெரிந்துகொள்ள முயலும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்துள்ளது. இத்தகைய மின்னஞ்சல்கள் புதுப்புது நவீன பாணிகளுடன் இடம்பெறுகின்றன.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு இத்தகைய மின்னஞ்சல் தொடர்பான 47,500 சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டு எண்ணிக்கையைவிட ஏறக்குறைய மூன்று மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்த மார்ச் மாதத்திற்கும் மே மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் 1,500 ஏமாற்று இணையத் தொடர்புகள் பலருக்கும் அனுப்பப்பட்டன. இந்த எண்ணிக்கை முந்தைய மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய இரண்டு மடங்காகும்.
இதனிடையே, இந்த நிலவரம் பற்றி கருத்து கூறிய தொடர்பு தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன், சிங்கப்பூரர்கள் முன்பைவிட சிறப்பான பாதுகாப்புள்ள இணையப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றத் தொடங்கி இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இணையம் மூலம் பட்டுவாடாக்களை செய்யும்போது பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொள்ளும் வகையில் அவர்கள் இரு நிலை பாதுகாப்பு நடைமுறை போன்ற பலவற்றையும் கடைப்பிடிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
இருந்தாலும் ஆய்வு முடிவை பார்க்கையில் இணையத்தை அதிகம் பயன்படுத்தும் இளையர்கள் கூட மோசடி மின்னஞ்சல்களை அடையாளம் காணும் திறமை இல்லாதவர்களாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது. ஆகையால் நம்முடைய இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்று ஃபேஸ்புக் பக்கத்தில் அமைச்சர் குறிப்பிட்டார்.

