நாளை மறுதினம் (ஆகஸ்ட் 29) முதல் தென்கொரியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் தங்களது சொந்த வசிப்பிடத்திற்குப் பதிலாக தனிமைப்படுத்தும் வளாகங்களில் 14 நாட்களுக்கு வசிப்பிடத்தில் இருக்கும் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சிங்கப்பூருக்கு வருவதற்கு முந்தைய 14 நாட்களில் தென்கொரியா வழியாக இடைவழிப் பயணம் மேற்கொண்டவர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும்.
வசிப்பிடத்தில் இருக்கும் உத்தரவை நிறைவேற்றிய பிறகு அவர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் என்று அமைச்சு நேற்று தெரிவித்தது.
இந்தப் புதிய நடைமுறைக்கு முன்பு, “குறைந்த அபாயம் கொண்ட” நாடுகளிலிருந்து ஜூன் 18ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்கு வரும் பயணிகள், அவர்களது வீடுகளிலேயே இருக்கும் 14 நாள் உத்தரவை நிறைவேற்ற அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அந்த நாடுகளின் பட்டியலில் தென்கொரியாவும் இடம்பெற்று இருந்தது.
தென்கொரியாவில் தேவாலயங்களில் கொரோனா கிருமித்தொற்றுக் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிகாரிகள் கிருமிப் பரவலை முறியடிக்கக் கடுமையாகப் போராடி வருகின்றனர். இந்த நிலையில், தென்கொரியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோர் மூலம் கிருமிப் பரவலைத் தடுக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில், “தென்கொரியா முழுவதும் கிருமி பரவக்கூடிய சாத்தியம் பற்றி அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்,” என்று குறிப்பிட்டது.