கொரோனா கிருமிப் பரவல் காரணமாக சாலைகளில் போக்குவரத்து குறைந்துள்ளதோடு பயணம் செய்யும் முறையும் மாறி வருவதால், குறைந்த அளவில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட சில சாலைத் தடங்கள் சைக்கிளோட்டுவதற்கும் பேருந்துகள் செல்வதற்கும் மாற்றப்படலாம் என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
மேலும், குறிப்பிட்ட சாலைகளைப் பாதசாரிகளின் பயன்பாட்டிற்காக மாற்றும் சாத்தியமும் இருப்பதாக அவர் தெரிவித்தார். அதிபர் உரை மீதான போக்குவரத்து அமைச்சின் பிற்சேர்க்கையில் திரு ஓங் நேற்று இதனைத் தெரிவித்தார்.
கிருமிப் பரவல் சூழல் காரணமாக கிரீஸ் தலைநகர் ஏதன்ஸ் உள்ளிட்ட பல நகரங்களில் சில சாலைப் பகுதிகள் பாதசாரிகளுக்கும் சைக்கிளோட்டிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தற்போதைய சூழலில் பலர் வீட்டிலிருந்து வேலை செய்வதையும் உச்ச நேரங்களில் பொதுப் போக்கு வரத்தில் நெரிசலைக் குறைக்க ஊழியர்கள் வெவ்வேறு நேரங்களில் வேலைக்குச் சென்று வருவதையும் அமைச்சர் ஓங் சுட்டினார்.
2030ஆம் ஆண்டிற்குள் சைக்கிளோட்டப் பாதை கட்டமைப்பை 1,300 கிலோமீட்டராக அரசாங்கம் விரிவுபடுத்தவுள்ளது. தற்போது அந்தக் கட்டமைப்பின் நீளம் 460 கிலோ மீட்டராக உள்ளது.
கார்கள் குறைந்த தேசமாக சிங்கப்பூரை உருவாக்கும் இலக்கை எட்டுவதற்கு இத்தகைய திட்டங்கள் உதவும் என்று திரு ஓங் கூறினார்.
நிலப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து குறித்த மற்ற திட்டங்கள் பற்றியும் அவர் பேசினார்.
நிலப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, உச்ச நேரங்களில் 90 விழுக்காடு பயணங்கள் 45 நிமிடங்களுக்குள் நிறைவுபெறுவது குறித்த இலக்கை எட்ட தொடர்ந்து திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
பொதுப் போக்குவரத்து முறையில் நம்பகத்தன்மையை நிலைநாட்ட தொடர்ந்து வளங்கள் முதலீடு செய்யப்படும் என்று திரு ஓங் தெரிவித்தார். சுமார் ஆண்டுக்கு ஒருமுறை புதிய எம்ஆர்டி நிலையங்களும் ரயில் பாதைகளும் திறக்கப்படும்.
நடமாடும் பிரச்சினைகள் உடையோருக்கு உதவ பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு பொதுப் போக்குவரத்து மன்றத்துடன் சேர்ந்து தமது அமைச்சு பணியாற்றும் என்று திரு ஓங் தெரிவித்தார்.
பொதுப் போக்குவரத்து முறையை விரிவுபடுத்துவதற்கு பெரிய அளவிலான உள்கட்டமைப்பு தேவைப்படுவதாகவும் அதற்கு செலவும் ஆகும் என்றார் அவர்.
"ஆனால், இது ஓர் அத்தியா வசிய செலவு. அதைச் சிக்கனத்துடன் செய்ய வேண்டும். விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, விமானப் பயணங்களைப் பாதுகாப்பான முறையில் அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்," என்றும் அவர் வலியுறுத்தினார்.
பயணிகளுக்கான சேவைகளைக் கவனமாகவும் கட்டங்கட்டமாகவும் தொடர, சிங்கப்பூர் மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் அவர். கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்கும் நாடுகள் அல்லது நகரங்களுடன் ஏற்பாடுகளைத் தொடங்க வேண்டும். சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனைய திட்டத்தை அரசாங்கம் மறுஆய்வு செய்து வருகிறது என்று அவர் கூறினார்.
கப்பல் போக்குவரத்து என வரும்போது, கொவிட்-19 சூழலில் அந்தத் துறை மீள்திறனுடன் செயல்பட்டு வருவதை அமைச்சர் ஓங் சுட்டினார். முன்னோக்கிச் செல்கையில், 2040களில் துவாஸ் துறைமுக கட்டுமானப் பணிகளைத் திட்டமிட்டபடி நிறைவேற்றும் பணியில் சிங்கப்பூர் தொடர்ந்து ஈடுபடும் என்று அவர் சொன்னார்.
மலேசியாவுடனான எல்லை கடந்த ரயில் திட்டங்களைப் பொறுத்தவரை, கோலாலம்பூர்- சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் தொடர்பாக மலேசியாவுடன் சிங்கப்பூர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக திரு ஓங் தெரிவித்தார்.

