பணியிடைக்காலத்தில் இருப்பவர்கள் கட்டடச் சூழல் துறையில் புதிய வேலை தேடிக்கொள்ள விரும்பினால், அத்துறை தொடர்பான திறன்களைக் கற்றுக்கொள்ள உதவியாக புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கட்டட, கட்டுமான ஆணையம், தொழில்நுட்பக் கல்விக் கழகம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி உள்ளிட்ட பயிற்சி வழங்குநர்களின் ஆதரவுடன் இம்மாதத்தில் இருந்து படிப்படியாக கிட்டத்தட்ட 900 பயிற்சி வாய்ப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு தெரிவித்து இருக்கிறது.
கட்டுமானம் மற்றும் கட்டடச் சூழல் நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் போன்ற துறைகளில் பத்துக்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் வழங்கப்படவுள்ளன.
எஸ்ஜி ஒற்றுமை திறன்கள் திட்டத்தின்கீழ் இந்தப் பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. வேலை தேடும்போதே தங்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன், ஆறு முதல் 12 மாதங்கள் வரையிலான முழு நேரப் பயிற்சித் திட்டங்களாக இவை உருவாக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரிக்கு நேற்று சென்றிருந்த கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங், புதிய பாடப்பிரிவுக்குரிய வகுப்பில் அமர்ந்து, கட்டடத் தகவல் மாதிரியமைப்பு நிர்வாக சிறப்புப் பட்டயம் பயிலும் பயிற்சியாளர்கள் கணினியைப் பயன்படுத்தி மெய்நிகர் பாணியில் ஒரு கட்டடத்தை எவ்வாறு வடிவமைக்கின்றனர் என்பதைக் கவனித்தார்.
நிறுவனங்களுக்குத் தேவையான திறன்களைப் பயிற்சியாளர்கள் பெறும் வகையில் பாடப்பிரிவுகள் உருவாக்கப்படுவதை உறுதிசெய்ய பல்வேறு பயிற்சி வழங்குநர்களுடனும் முன்னணி தொழில் நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றி வருவதாக ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு தெரிவித்தது.
கட்டடத் தகவல் மாதிரியமைப்பு நிர்வாகத்தில் சிறப்புப் பட்டயம் பெற ஓராண்டு பயில வேண்டும். இதற்கான கட்டணம் $1,000. இதற்கு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவி நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பும் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியும் சொத்து மேம்பாட்டு நிறுவனமான கேப்பிட்டலேண்ட், உள்கட்டமைப்பு நிறுவனமான சிபிஜி குழுமம் ஆகியவற்றுடன் இணைந்து, மின்னிலக்க வடிவமைப்பு, திட்ட நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளைப் பெறும் விதமாக இந்தப் பாடப்பிரிவில் பயிற்சி வழங்குகின்றன.
அவ்விரு நிறுவனங்களும், ஓராண்டு பயிற்சியை முடித்தவர்களிடம் இருந்தே வேலைக்கு ஆட்களை எடுக்கக்கூடும்.
கடந்த ஜூலையில் எஸ்ஜி ஒற்றுமை திறன்கள் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, 40 பாடப்பிரிவுகளில் கிட்டத்தட்ட 700 பேர் சேர்ந்துள்ளனர்.
"பணியிடைக்காலத்தில் இருப்பவர்களுக்கு ஏற்ற வகையில் எஸ்ஜி ஒற்றுமை திறன்கள் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை சேர்ந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 40 வயது மற்றும் அதற்கு மேலானவர்கள் என்பது மகிழ்ச்சிஅளிப்பதாக உள்ளது," என்று ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பின் தலைமை நிர்வாகி ஓங் ஸி சின் நேற்றைய நிகழ்ச்சியின் போது கூறினார்.

