சிங்கப்பூரில் நேற்று (ஆகஸ்ட் 27) சுகாதார அமைச்சு அறிவித்த 77 கிருமித்தொற்று சம்பவங்களில் 2 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை. தொற்றுகண்ட இருவரும் சிங்கப்பூரர்கள் என்றது சுகாதார அமைச்சு.
அவர்களில் ஒருவர் எக்செல்சியார் கடைத்தொகுதிக்கு சென்றவர். அங்கு பணிபுரியும் ஒருவருக்கு ஏற்கெனவே கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இம்மாதம் 15 முதல் 18ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அங்கு சென்றவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சு தெரிவித்தது.
இந்தியாவிலிருந்து திரும்பிய 82 வயது சிங்கப்பூர் மாது உட்பட, வெளிநாடுகளிலிருந்து திரும்பிய ஐவருக்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
மற்ற 4 பேரில் ஒருவர் நிரந்தரவாசி, ஒருவர் சார்ந்திருப்போர் அட்டை வைத்திருப்பவர், ஒருவர் நீண்டகால வருகை அனுமதி அட்டை வைத்திருப்பவர், ஒருவர் சிறப்பு அனுமதி அட்டை வைத்திருப்பவர்.
உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 2 ஆக உள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அது ஒன்றாக இருந்தது
ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த இரு வாரங்களின் தினசரி சராசரி 1 ஆக உள்ளது.
இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.


