புதிதாக மேம்படுத்தப்பட்ட சுவா சூ காங் நீர் சுத்திகரிப்பு ஆலை இவ்வாண்டின் சிறந்த தண்ணீர் திட்டப்பணியாக உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு உள்ளதாக பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்து உள்ளது.
2020ஆம் ஆண்டுக்கான உலக தண்ணீர் விருதுக்கு அந்த ஆலை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று கழகம் கூறியது.
அனைத்துலக தண்ணீர் துறையில் மிகவும் அவசியமான செயலாக்கத்திறனை மேம்படுத்துதல், புத்தாக்கத்தைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட சாதனைகளை அங்கீகரிக்கும் வண்ணம் உலகளவிலான இந்த விருது கடந்த 2006ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
சிங்கப்பூரின் சுத்திகரிப்பு ஆலையைப் போலவே அமெரிக்கா, பிலிப்பீன்ஸ், ஹாங்காங் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நீர் சுத்திகரிப்பு ஆலைகளும் இவ்வாண்டின் விருதுக்குத் தகுதி பெற்றுள்ளன.
உலக தண்ணீர் அறிவாற்றல் நிறுவனம் இந்த விருதை வழங்கி வருகிறது. பெருமைக்குரிய இந்த உலக தண்ணீர் விருதை பொதுப் பயனீட்டுக் கழகம் தொடர்ந்து மூன்றாம் ஆண்டாகப் பெற்றுள்ளது.
2018ஆம் ஆண்டில் உலு பாண்டான் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை தண்ணீர்/கழிவு நீர் திறன்திட்ட விருதைப் பெற்றது. எரிசக்தி, ஊழியர்கள், நிலப்பரப்பு ஆகிய அம்சங் களை இந்த ஆலை குறைவாகப் பயன்படுத்துகிறது. இடத்தைச் சிக்கனமாக பயன்படுத்தும் தொட்டிகள், எரிசக்தியைக் குறைவாகப் பயன்படுத்தும் முறைகள், தானியக்கக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் போன்றவை அங்கு செயலில் உள்ளன.
கடந்த ஆண்டுக்கான கடல் நீரை குடிநீராக்குவதற்கான விருதை துவாஸ் ஆலை தட்டிச் சென்றது.
சுவா சூ காங் நீர் சுத்திகரிப்பு ஆலை, உலு பாண்டான் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, துவாஸ் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை ஆகிய மூன்றும் பொதுப் பயனீட்டுக் கழகத்தால் நிர்வகிக்கப்படுபவை.
சுவா சூ காங் நீர் சுத்திகரிப்பு ஆலை சிங்கப்பூரின் ஆகப் பழமையானது. 1975ஆம் ஆண்டிலும் தொடர்ந்து 1981ஆம் ஆண்டிலும் இரு கட்டங்களாகக் கட்டப்பட்டது.
உலகிலேயே ஆகப்பெரிய பீங்கான் சவ்வுத்திறனுடன் கூடிய இந்த சுத்திகரிப்பு ஆலையை மேம்படுத்தும் பணிகள் கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கின. சுமார் $162 மில்லியன் செலவிலான புதுப்பிப்புத் திட்டம் மூன்றாண்டுகள் நீடித்தது.
பீங்கான் சவ்வுத்திறன் மூலம் நீரை சுத்திகரிக்கும் முறை அதிக ஆற்றல் வாய்ந்தது. இதற்கு முன்னர் பின்பற்றப்பட்ட நீரிலிருந்து மணலை வடிகட்டும் முறையைக் காட்டிலும் இது மேம்பட்டது.

