தனது ஊழியர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேரை ஆட்குறைப்பு செய்திருப்பதாக சன்டெக் சிங்கப்பூர் மாநாடு மற்றும் கண்காட்சி மையம் தெரிவித்து உள்ளது.
கொவிட்-19 கிருமிப் பரவல் காரணமாக எம்ஐசிஇ (MICE) எனப்படும் கூட்டங்கள், ஊக்குவிப்புகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சித் துறையில் சரிவு ஏற்பட்டதன் விளைவாக ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதன் நிர்வாகம் கூறியது.
உணவு தயாரிப்பு, விற்பனை மற்றும் நிகழ்வுகள், மனிதவளம், நிதி ஆகிய பிரிவுகளில் வேலை செய்து வந்த 85 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் அந்த மையத்தின் நிர்வாகம் தெரிவித்தது. இந்த 85 பேரில் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் 60 பேர் என்றும் இதர 25 பேர் வெளிநாட்டு ஊழியர்கள் என்றும் அது குறிப்பிட்டது.
ஆட்குறைப்பு செய்யப்பட்ட பின்னர் சன்டெக் சிங்கப்பூரில் 89 ஊழியர்கள் இருப்பர். உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள்.
கொவிட்-19 கொள்ளைநோய் பரவலால் எம்ஐசிஇ துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சன்டெக் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற வேண்டிய நிகழ்வுகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆட்குறைப்பு செய்வதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் அத்தியாவசியமற்ற செலவுகளைக் குறைப்பதில் மையம் கவனம் செலுத்தியதாகவும் புதிதாக ஆட்கள் நியமிக்கப்படுவதை முடக்கி வைத்திருந்ததாகவும் சன்டெக் சிங்கப்பூர் கூறியது. மேலும் தனது நிர்வாகத்தினருக்கு 40 விழுக்காடு சம்பளக் குறைப்பும் செய்யப்பட்டதாக அது தெரிவித்தது.
தனது ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதற்கான முடிவு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை என்றும் ஊழியர்களின் செயல்திறனுக்கும் ஆட்குறைப்புக்கும் தொடர்பில்லை என்றும் சன்டெக் சிங்கப்பூரின் தலைமை நிர்வாக அதிகாரி அருண் மாதோக் தெரிவித்தார்.
"எங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கு ஒவ்வொரு ஊழியரும் காலம் காலமாகப் பங்களித்து வந்துள்ளனர். திறன்படைத்த, அருமையான ஊழியர்கள் பலரையும் வேறு வேலை தேடிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வது உண்மையிலேயே வருத்தத்திற்குரியதாக இருந்தது," என்று அவர் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் கூறினார்.

