போலிஸ் பாதுகாப்புத் தளபத்தியம் நடத்தும் அதிரடித் தாக்குதல் படைப் பிரிவு (சிஏயு) பயிற்சிப் படிப்பில் சேர்ந்து பட்டம் பெற்ற முதல் பெண்மணி சார்ஜண்ட் அனா. (இது உண்மைப் பெயர் அல்ல)
இந்தப் பிரிவு, போலிஸ் பாதுகாப்புத் தளபத்தியத்தைச் சேர்ந்த மிகவும் உயரிய பிரிவாகும். அதிபர், அமைச்சர்கள், இதர முக்கிய பிரமுகர்களைப் பாதுகாப்பது இந்தப் பிரிவின் பணியாகும்.
இதில் இடம்பெற்று இருப்பவர்களின் விவரங்களை வெளியிடக் கூடாது. இந்த படைப்பிரிவில் இடம்பெற வேண்டுமானால் மூன்று மாத கடும் பயிற்சியில் தேர்ச்சி பெறவேண்டும். ஆகக் கடைசியாகக் கலந்துகொண்ட எட்டு பேரில் ஐந்து பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் சார்ஜண்ட் அனாவும் ஒருவர்.
சார்ஜண்ட் அனா போன்ற அதிகாரிகள் சிங்கப்பூரில் 2018ல் நடந்த அமெரிக்க அதிபர்-வடகொரிய தலைவர் சந்திப்பு போன்ற முக்கிய நிகழ்ச்சிகளிலும் தேசிய தின அணி வகுப்பிலும் சென்ற வாரம் நாடாளுமன்றம் கூடியபோதும் அதிரடிப் படையினர் என்ற முறையில் தங்கள் பங்கை ஆற்றினர்.
ஏதாவது சம்பவங்கள் நிகழும்போது முதல்நிலை அரணாகத் திகழ்ந்து இவர்களே தங்கள் பொறுப்பில் இருக்கும் பிரமுகர்களைக் காப்பாற்றுவார்கள்.
ஆகையால் இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் சவால்மிக்கதாக இருக்கும் என்று அதிரடிப் படைப்பிரிவின் தளபத்திய அதிகாரி ஏஎஸ்பி பிரோஸ் லியோங், சென்ற வெள்ளிக்கிழமை நடந்த பயிற்சித் திறன்விளக்கக் காட்சியின்போது தெரிவித்தார்.

