அதிரடிச் சோதனையில் 157 பேர் அகப்பட்டனர்

2 mins read
22eb5439-407e-49c9-af53-13cf01cbae72
-

ஒரு வாரமாக நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் 157 பேரைக் கைது செய்துள்ளனர். குற்றச் செயல்களுக்கு எதிராக ஆகஸ்ட் 23 முதல் 30 வரை நடத்தப்பட்ட இச்சோதனைகளில் சிக்கியோரில் 128 பேர் ஆண்கள். எஞ்சிய 29 பேர் பெண்கள். பிடிபட்டவர்கள் 16 வயதுக்கும் 81 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

ஜூரோங் வெஸ்ட், துவாஸ், சுவா சூ காங், புக்கிட் பாஞ்சாங், புக்கிட் பாத்தோக் ஆகிய வட்டாரங்களில் உள்ள பல்வேறு இடங்களில் ஜூரோங் போலிஸ் பிரிவு அதிகாரிகளின் தலைமையில் சோதனைகள் நடத்தப்பட்டன.

இதற்காக மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, நிலப் போக்குவரத்து ஆணையம், குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.

ஜூரோங் வெஸ்ட் காப்பி கடை ஒன்றில் ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று பிற்பகல் 2.30 மணியளவில் சட்டவிரோதமாக குதிரைப் பந்தயம் கட்டிக்கொண்டிருந்த சிலரை போலிசார் கையும் களவுமாக பிடித்தனர். 53 வயதுக்கும் 72 வயதுக்கும் இடைப்பட்ட 13 ஆண்களும் மாது ஒருவரும் பிடிபட்டதுடன் $4,421ம் கைப்பற்றப்பட்டது.

இந்தச் சட்டவிரோத நடவடிக்கை பட்ட பகலில் காப்பி கடை வாடிக்கையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் மத்தியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

பொது இடங்களில் சூதாட்டம், பாலியல் சேவை தொடர்பான நடவடிக்கைகள், குண்டர் கும்பல் உறுப்பினர்கள் என்ற சந்தேகம், போக்குவரத்து மற்றும் வாகனம் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் ஆட்கள் சிக்கினர். கடன்முதலை நடவடிக்கைகளுக்குத் துணை போனது, கடன் மோசடிகள் ஆகியவற்றின் தொடர்பிலும் 53 ஆண்கள் மற்றும் 14 பெண்கள் விசாரணையில் உதவி வருகின்றனர்.

இணைய வர்த்தக மற்றும் வர்த்தகக் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சிலர் மீதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போதைப்பொருள் மற்றும் வரி செலுத்தாத சிகரெட்டுகள் தொடர்பிலும் சிலர் கைதாகியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்