வலுவான நாடாக உருவெடுக்க சிங்கப்பூர் தனது பொருளியலை நான்கு வழிகளில் பலப்படுத்த வேண்டியுள்ளது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் (படம்) நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
முதலாவதாக, பொருளியல் உருமாற்றத்திற்கு ஒருங்கிணைந்த அணுகுமுறையை நாடு கைக்கொள்ள வேண்டும். சிங்கப்பூர் பொருளியல் பல பங்காளிகளைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட துணைப் பிரதமர், அந்த அமைப்பிற்கு அரசாங்கம், வர்த்தகங்கள், தொழிலாளர் இயக்கம் என்ற முத்தரப்புப் பங்காளித்துவம் மிகப் பெரிய பலமாகத் திகழ்ந்து வருகிறது என்றார்.
இருப்பினும், அதிக ஒத்துழைப்பிற்கு இன்னும் இடமுள்ளது என்ற திரு ஹெங், அதற்கு எடுத்துக்காட்டாக நெதர்லாந்து நாட்டையும் அதன் ‘முச்சுருள் வளைய’ புத்தாக்க மாதிரியையும் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார். ‘முச்சுருள் வளைய’ மாதிரியின்கீழ் அரசாங்கம், வர்த்தகங்களுடன் கல்வித் துறையும் இணைந்து அறிவைப் பெருக்கி, மூல முன்மாதிரிகளைச் சோதித்துப் பார்த்து, புத்தாக்கத்தை ஊக்குவிக்கின்றன.
“நமது கல்வி, ஆய்வு நிலையங்கள், சமூகக் குழுக்கள், உலகம் முழுவதும் இருந்தும் ஆர்வமிக்க பங்காளிகள் என இன்னும் பல பங்காளிகளுடன் நெருக்கமான தொடர்பை உருவாக்குவதற்கான ஒரு சோதனைத்தளமாக நமது முத்தரப்புப் பங்காளித்துவத்தைக் கொள்ள வேண்டும்,” என்று நிதி அமைச்சருமான திரு ஹெங் சொன்னார்.
இரண்டாவதாக, மக்கள் புதிய வாய்ப்புகளைக் கைப்பற்றி, தங்களது துறைகளில் செழிப்புறும் வகையில் ஒவ்வொருவரும் தனது முழுமையான ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான முயற்சிகள் மறுஇரட்டிப்பு செய்யப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் கூறினார். அதற்கு, பிறப்பில் இருந்து பாலர் கல்வி, பள்ளிக் கல்வி, வாழ்நாள் கற்றல் என வாழ்வின் இறுதி வரை நீடிக்கும் வகையிலான முழுமையான அணுகுமுறை தேவை என அவர் குறிப்பிட்டார்.
மக்களை முழுமையாக மேம்படுத்துவதற்கான புதிய சாத்தியங்களை நாம் ஆராய வேண்டும் எனக் கூறிய அவர், தேசிய ஆய்வு நிறுவனம் பல்வேறு ஆய்வுத் திட்டங்களுக்கு ஆதரவளித்து வருவதையும் சுட்டிக்காட்டினார்.
அடுத்ததாக, பொருளியல் சீர்குலைவுக்கு இடையே புதிய ஒளிக்கீற்றுகளைக் கண்டறியும் வழிகளை வலுப்படுத்த வேண்டும் என்று பொருளியல் கொள்கைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு ஹெங் தெரிவித்தார்.