சிங்கப்பூர் ஊழியர்களுக்கு எதிராக நிறுவனங்கள் பொறுப்பற்ற முறை யில் பாரபட்சத்துடன் நடந்துகொள்ள அனுமதிக்கப்படாது என்று இரண்டாவது மனிதவள அமைச்சர் டான் சீ லேங் தெரிவித்து இருக்கிறார்.
இப்போதைய மிகச் சிரமமான பொருளியல் சூழலில், பொருள்பொதிந்த வேலைகளில் சேர்வதற்கான நியாயமான வாய்ப்புகள் சிங்கப்பூரர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் முதன்முதலாக உரையாற்றிய டாக்டர் டான், நிறுவனங்கள் சிங்கப்பூர் ஊழியர்களை மையமாகக் கொண்ட அணியைப் பலப்படுத்த கடுமையாகப் பாடுபட வேண்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
நிறுவனங்கள் ஊழியர்களைச் சேர்க்கும்போது சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதன்மூலம் அவர்களுக்கு வலுவான ஆதரவை அரசாங்கம் வழங்கும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
அதேவேளையில், ஆற்றல் மிகுந்த வெளிநாட்டினரையும் வெளிநாட்டு முதலீடுகளையும் சிங்கப்பூர் திருப்பி அனுப்பிவிடாது என்று அவர் நிறுவனங்களுக்கு உறுதி அளித்தார்.
ஆற்றல் மிகுந்த வெளிநாட்டு ஊழியர்களை அனுமதிப்பதன் காரணமாக உலக ரீதியில் நமது போட்டித்திறன் அதிகரிக்கும் என்றும் சிங்கப்பூரர்கள் பலவற்றையும் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
இளம் பட்டதாரிகள், முதிர்ச்சிஅடைந்த ஊழியர்கள் ஆகிய இரண்டு பிரிவு ஊழியர்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்று அமைச்சர் உறுதி தெரிவித்தார்.
இரண்டாவது வர்த்தக தொழில் அமைச்சரும், பிரதமர் அலுவலக அமைச்சருமான டாக்டர் டான், நம் ஊழியர்களே நம் பொருளியலின் இதயம் போன்றவர்கள் என்பதை மறக்கவே கூடாது என்றார்.
முதிர்ச்சி அடைந்த ஊழியர்களைப் பொறுத்த வரையில், அவர்களுக்கு அனுபவ அறிவு அதிகம் என்று தெரிவித்த அவர், புதிய வேலைகளுக்குத் தயாராகி வரும் அத்தகைய ஊழியர்களை முதலாளிகள் நியாயமாக நடத்தி அவர்கள் மேம்பட நல்ல வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.
இளம் பட்டதாரிகளைப் பொறுத்த வரையில் அவர்கள் முழு ஆற்றலோடு மேம்படும் வகையில் தன்னால் ஆன அனைத்தையும் செய்யப்போவதாக டாக்டர் டான் உறுதி தெரிவித்தார்.
எதிர்பார்ப்புகளில் உண்மை நிலவரங்களுக்கு ஏற்ப நடந்துகொள்ளும்படி வேலை தேடுவோரை வலியுறுத்திய அவர், சிங்கப்பூர் வெற்றி பெற புதிய புத்தாக்க, உருமாற்ற வழிகளை அது காணவேண்டும் என்றும் தெரிவித்தார்.