தகவல்தொடர்பு தொழில்நுட்பம், நிபுணத்துவச் சேவை ஆகிய இரண்டு துறைகளில் ‘எம்பிளாய்மண்ட் பாஸ்’ அனுமதியின் பேரில் இங்கு வேலை பார்க்க வருவோருக்கான குறைந்தபட்ச சம்பளத்தை இன்னும் அதிகப்படுத்துமாறு மனிதவள அமைச்சுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் எம்பிளாய்மண்ட் பாஸ் பெற்று வேலைக்கு வரும் வெளிநாட்டினருக்கு உரிய குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் தொழிற்சங்க இயக்க உறுப்பினரான பேட்ரிக் டே அந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
என்டியுசி எனப்படும் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் உதவி தலைமைச் செயலாளரான திரு டே, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், நிபுணத்துவச் சேவை ஆகிய இரண்டு துறைகளையும் சேர்ந்த அதிக நிறுவனங்கள், ஊழியர்களைச் சேர்ப்பதில் பாரபட்சமாக நடந்துகொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ள நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்று இருக்கும் என்பதைச் சுட்டினார்.
அதிபர் உரை பற்றிய நாடாளுமன்ற விவாதம் நேற்றுத் தொடங்கியது. அதில் கலந்துகொண்டு பேசிய திரு டே, சிங்கப்பூரர்களை மையமாகக் கொண்ட ஊழியர் அணியைப் பலப்படுத்துவதற்குப் பல யோசனைகளை முன்வைத்தார்.
பட்டத்தொழிலர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள், நிபுணர்கள் ஆகிய வேலைகளில் சிங்கப்பூரர்களைக் கொண்ட மைய அணியைப் பலப்படுத்தும் முயற்சிகள் எல்லா பதவி நிலைகளிலும் இடம்பெற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
பன்னாட்டு நிறுவனங்கள், ஓர் இடத்தில் இருந்து வேறு இடத்துக்குத் தங்கள் ஊழியர்களை இடம் மாற்றுவது உண்டு.
இப்படி சிங்கப்பூருக்கு ஊழியர்களைக் கொண்டுவருவதன் தொடர்பில் அந்த நிறுவனங்கள் ஒளிவு மறைவு இல்லாமல் நடந்துகொள்ளவேண்டும் என்றும் நாடாளு மன்றத்தில் திரு டே கோரிக்கை விடுத்தார்.
ஊழியர்களைச் சேர்ப்பதில் பாரபட்சம் காட்டும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் கட்டாய கட்டுப்பாடுகளையும் தண்டனையையும் விதிக்கவேண்டும் என்று குறிப்பிட்ட அவர், நியாயமான வேலை நியமனம் அல்லது பாரபட்சத் தடுப்புச் சட்டம் என்ற ஏற்பாடு சிங்கப்பூரில் சாத்தியமா என்பதையும் அதைப் பயன்படுத்துவது பற்றியும் நாம் ஆராயவேண்டும், அது பற்றி பரிசீலிக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
அதிக தேர்ச்சி, நடுநிலை தேர்ச்சி என்ற இரண்டு வகை வரம்புகளை விதித்து அதன் மூலம் இங்கு வேலை பார்க்கும் வெளிநாட்டு பட்டத்தொழிலர், நிர்வாகிகள், மேலாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற தொழிற்சங்க இயக்கத்தின் யோசனையை நேற்று மன்றத்தில் திரு டே மறுபடியும் வலியுறுத்தினார்.