குறைந்த வருமான ஊழியர்களுக்கு தானாக முன்வந்து படிப்படியாகச் சம்பளங்களை உயர்த்தி முன்னேற்றப் பாதையில் அவர்களை அழைத்துச் செல்லும் நிறுவனங்கள் புதிய படிப்படியான சம்பள உயர்வு முறை முத்திரை மூலம் அங்கீகரிக்கப்படும் என மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியுள்ளார்.
படிப்படியான சம்பள உயர்வு முறை என்பதை குறைந்தபட்ச ஊதிய மேம்பாடு என்று குறிப்பிட்ட அமைச்சர், தற்போது துப்புரவு, பாதுகாவல் மற்றும் நிலவனப்பு ஆகிய மூன்று துறைகளில் அது கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.
உணவுச் சேவைகள், சில்லறை வர்த்தகம் போன்ற துறைகளும் இதுபோன்ற சம்பளமுறையைப் பின்பற்றி முத்திரை பதிக்கும் சாத்தியம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதிபர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திருவாட்டி டியோ, படிப்படியான சம்பள உயர்வு முறை முத்திரை நல்லமுறையில் செயலாற்ற ஒட்டுமொத்த சமூக மும் ஒன்றிணைந்து ஈடுபடும் விரிவான நடவடிக்கை இருத்தல் அவசியம் என்றார்.
“குறைந்த வருமான ஊழியர்களை ஆதரிக்கும் நிறுவனங்களின் பொருட்களை வாங்கி அவற்றின் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் அத்தகைய முற்போக்கு நிறு வனங்களை ஒரு பயனீட்டாளர் என்ற முறையில் நாம் ஆதரிக்க முடியும். அதற்கு சிறிய அளவிலான கூடுதல் விலை தரவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
“இவ்வாறு ஆதரவு வழங்குவதன் மூலம் மேலும் பல நிறுவனங்கள் படிப்படியாக உயரும் சம்பள முறையைக் கடைப்பிடிக்கத் தொடங்கும். இதன்மூலம் குறைந்த வருமான ஊழியர்கள் பலனடைவார்கள்,” என்று விளக்கினார் திருவாட்டி டியோ.
படிப்படியான சம்பள உயர்வு முறை என்பது தேசிய தொழிற்சங்க காங்கிரசால் கடந்த 2012ஆம் ஆண்டு ஒரு முன்னோடித் திட்டமாகக் கொண்டு வரப்பட்டது. ஊழியர்களின் வெவ்வேறு திறன்
களுக்கு ஏற்றவாறு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் பயிற்சிக்கான தகுதிகளை இது நிர்ணயிக்கிறது.
துப்புரவு, பாதுகாவல் மற்றும் நிலவனப்பு ஆகிய மூன்று துறை
களைச் சேர்ந்த சுமார் 8,000 ஊழியர்களை இத்திட்டம் உள்ளடக்கி உள்ளது.
2022ஆம் ஆண்டில் மின்தூக்கி மற்றும் மின்படிக்கட்டு பராமரிப்புத் துறைக்கும் இந்த சம்பள முறையைக் கட்டாயமாக்க கொவிட்-19 கொள்ளைநோய் பரவலுக்கு முன்னதாக அரசாங்கம், தொழிற்சங்கம், முதலாளிகள் என்னும் முத்தரப்புப் பங்காளிகள் முயற்சிகளை மேற்கொண்டதாக திருவாட்டி டியோவுக்கு முன்னதாகப் பேசிய என்டியுசி துணை தலைமைச் செயலாளர் கோ போ கூன் தெரிவித்தார்.
அத்துடன் கழிவு நிர்வாகத் துறையிலும் இதனை அமல் செய்வதற்கான சாத்தியத்தை தொழிலாளர் இயக்கம் ஆலோசித்து வருவதாகவும் அவர் சொன்னார்.
“மேலும் மேலும் பல துறைகள் படிப்படியான சம்பள உயர்வு முறையைப் பின்பற்றவேண்டும் என கட்டாயமாக்குவது தற்போதுள்ள சூழலில் ஓர் இடையூறாக அமையலாம். எனவேதான் நிறுவனங்கள் தானாகவே முன்வருவதை அரசாங்கம் ஊக்குவிக்கிறது.
“முத்தரப்புப் பங்காளிகளுடன் இணைந்து அறிமுகம் செய்யப்படும் முத்திரை அங்கீகாரத்தின் பின்னணி இதுவே,” என்றார் திருவாட்டி டியோ.
ஏற்கெனவே கட்டாயமாக்கப்பட்டு உள்ள மூன்று துறைகளிலும் கடந்த ஐந்தாண்டுகளில் ஒட்டுமொத்த ஊதிய வளர்ச்சி 30 விழுக்காடு காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.