போதுமான எண்ணிக்கையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்கப்பூரில் இருப்பது நல்லது என்றாலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதனால் பிரிவினையும் முடக்கநிலையும் விளைந்துவிடக்கூடாது என்று அறிவுறுத்தினார் பிரதமர் லீ. அரசாங்கம் அந்த பாதையில் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார் அவர்.
நாடாளுமன்றத்தில் போதுமான எதிர்த்தரப்பினர் இருப்பதால் அரசாங்கம் எவ்வேளையிலும் மிகக் கவனமாகச் செயல்படுவதுடன் அதனிடம் ஒளிவுமறைவு ஏதுமில்லை என்றும் மக்களுக்குக் காட்ட முடியும் என்றார் அவர்.
ஆனால் இது நன்முறையில் ஈடேற, சிங்கப்பூருக்காக பணியாற்றும் ஒரே இலக்கை அரசாங்கமும் எதிர்த்தரப்பும் கொண்டிருக்க வேண்டும் என்றும் தனிப்பட்ட கட்சிக்காக அல்லது ஆதரவாளர்களுக்காக என்றிருக்கக்கூடாது என்றும் திரு லீ சுட்டினார்.
கூடுதல் எண்ணிக்கையில் எதிர்க்கட்சியினர், மேலும் கடுமையாகும் விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இருந்தாலும் அது சிறந்த சூழலுக்கு வழிவகுக்கும் என்று அர்த்தமில்லை. வேறுபட்ட கருத்துகளால் பிரிவினை வரக்கூடாது என்றார் பிரதமர்.
அரசியல் அப்போது நச்சுத்தன்மை பெற்று கசக்கும் என்றும் பிளவுபட்ட நாடு கீழ்நோக்கிச் செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திங்கட்கிழமையன்று எதிர்த்தரப்புத் தலைவர் பிரித்தம் சிங் (படம்) பேசியதைத் தாம் உன்னிப்பாக கேட்டதாக கூறிய திரு லீ, அவரது தொனியையும் அணுகுமுறையையும் தாம் மெச்சுவதாக குறிப்பிட்டார். அரசாங்க அமைப்புகள் அவருடன் இணைந்து செயல்பட்டு, நாடாளுமன்றத்தை ஆக்கபூர்வமான ஒரு விவாத கருத்தரங்காக வைத்திருக்க பணியாற்றும் என்றார்.
விவாதம் என்பது கொள்கைகள், உண்மைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும் என்றும் அதற்கு ஒரே வகை லட்சியங்களும் இலக்குகளும் வழிகாட்ட வேண்டும் என்றும் திரு லீ கோடிட்டார். மனப்பூர்வமாக நம்பிக்கை கொண்டுள்ள விவகாரங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தைரியமாகப் பேச வேண்டும் என்றும் சிங்கப்பூரின் பாதுகாப்பு, பொருளியல் வளர்ச்சி, எதிர்காலப் பாதுகாப்பு ஆகியவற்றைக் காக்க அவர்கள் அரசியலில் இருக்க வேண்டும் என்றும் திரு லீ நினைவுறுத்தினார்.
“அப்போதுதான் நம் அமைப்புமுறையில் இயற்கையாக ஏற்பட்ட இறுக்கங்களை நாம் சமாளித்து பயனுள்ள வகையில் அரசியல் நடத்தலாம்,” என்றார் திரு லீ. பிரிட்டிஷ், ஆஸ்திரேலிய நாடாளுமன்ற அமர்வுகளை உதாரணம் காட்டிய திரு லீ, அவை போர்வீரர்களிடையே நிகழும் சண்டை போன்று இருக்கும் என்று கூறினார்.
தொடர்ந்து திரு சிங் தமது உரையில் தம் தரப்பு வாதத்தை முன்வைத்து தெளிவுபடுத்தினார். நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் நிலவுவதற்காக தாம் எதிர்த்தரப்பாக இயங்குவதாக அவர் விளக்கினார். சிங்கப்பூரர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே எதிர்த்தரப்பின் இலக்கு என்று அவர் தெரிவித்தார்.