சொத்து மதிப்பீட்டாளர்கள் இனி வாடகைதாரர்களுக்கு வாடகைக் கட்டணக் கழிவுகள் பற்றி விளக்கமளிக்கலாம்

சொத்து மதிப்பீட்டாளர்கள் இனி வாடகைதாரர்களுக்கு வாடகைக் கட்டணக் கழிவுகள் பற்றி விளக்கமளிக்கலாம்

1 mins read
d0278c03-ff8f-46c0-ad56-026ab0d47a70
கோப்புப்படம்: எஸ்டி, ‌ஷிந்தாரோ தே -

வாடகைக் கழிவு கட்டமைப்பின் தொடர்பில் எழும் சச்சரவுகளைக் கையாளும்போது, சட்ட அமைச்சால் நியமிக்கப்படும் சொத்து மதிப்பீட்டாளர்களுக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கப்படலாம்.

கொவிட்-19 (தற்காலிக நட வடிக்கைகள்) சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின் அடிப்படையில் இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது.

கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படுவது இது இரண்டாவது முறை.

ஜூன் மாதத்தில் பரிந்துரைக்கப்பட்ட முதலாவது திருத்தத்தில், சொத்து உரிமையாளர்கள், கொவிட்-19 நோய்ப்பரவலால் பாதிக்கப்பட்ட சிறிய, நடுத்தர நிறுவன வாடகைதாரர்களுக்கும் துணை வாடகைதாரர்களுக்கும் கூடுதல் கட்டணக் கழிவுகளைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று பரிந்துரைக்கப்பட்ட இரண்டாவது திருத்தத்தில், சொத்து மதிப்பீட்டாளர்கள், வாடகைக் கட்டணத்தில் எந்த அளவுக்குக் கழிவுகள் வழங்கலாம் என்றும் சொத்து உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

வாடகை அல்லது உரிமை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத பராமரிப்பு மற்றும் சேவைகள் தொடர்பான செலவுகளால் பாதிக்கப்பட்டுள்ள வாடகைதார நிறுவனங்களுக்கு இந்தப் புதிய திருத்தங்கள் பொருந்தும்.

கொவிட்-19 (தற்காலிக நட வடிக்கைகள்) சட்டத் திருத்தங்களில் வருடாந்திர பொதுக் கூட்டங்களை நடத்துதல் போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது இம்மாதம் 30ஆம் தேதி முடிவடையும்.

இந்த இரண்டாம் திருத்தங்களின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் எந்த தேதி வரை நடப்பில் இருக்கும் என்பதை சட்ட அமைச்சு விரைவில் தெரிவிக்கும்.

இன்று சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டால், கொவிட்-19 நோய்ப்பரவலால் ஏற்படும் விவகாரங்களில் சிங்கப்பூரின் சட்டங்கள் தலையிடலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.