இவர் 24 ஆண்டுகளாக கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், குவாங்யாங் தொடக்கப் பள்ளி ஆசிரியரான திருவாட்டி சாந்தி தீனதயாளனிடம் இருக்கும் படைப்பாற்றல் குறையவில்லை.
ஆங்கில மொழி கற்றலை வழிகளில் பல சுவாரசியமானதாக்கி வருகிறார் இவர். திருவாட்டி சாந்தியின் வகுப்பில் மாணவர்கள் நீண்ட நேரம் இருக்கைகளில் அமர்ந்திருப்பதில்லை. அவர்களுக்கு எந்தெந்த அம்சங்களில் ஆர்வம் உள்ளது என்பதைப் பொறுத்து அவர்களுக்கான நடவடிக்கைகளை அவர்களே தேர்ந்தெடுக்க இவர் உதவுகிறார்.அவற்றில் குறிப்பிடும்படியாக, வெளிநாடுகளில் இருக்கும் சக மாணவர்களுக்கு திருவாட்டி சாந்தியின் மாணவர்கள் கடிதம் எழுதுவர்.
திருவாட்டி சாந்தி முன்னதாக பணியாற்றிய நியூ டவுன் தொடக்கப் பள்ளியில் தொடக்கநிலை 5 மாணவர்கள் மாதத்திற்கு ஒருமுறை நியூசிலாந்தில் இருக்கும் மாணவர்களுக்குக் கடிதம் எழுதினர்.
"தங்களுக்குப் பிடித்தமான உணவு, சிங்கப்பூரில் செல்ல விரும்பும் இடங்கள், இங்குள்ள மாணவர்கள் சீருடை அணிவதற்கான காரணம் என்பனபோன்ற பல விஷயங்கள் குறித்தும் அவர்கள் கடிதம் எழுதினர்," என்றார் திருவாட்டி சாந்தி, 47.
இதனால் மாணவர்களின் எழுத்தாற்றல் கணிசமாக மேம்பட்டதாக அவர் சொன்னார்.அதிபர் ஹலிமா யாக்கோப்பிடமிருந்து ஏழு ஆசிரியர்கள் அதிபர் விருதை பெற்றுக்கொண்டனர். அவர்களில் திருவாட்டி சாந்தியும் ஒருவர்.
மெய்நிகர் காணொளி வழியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங்கும் பங்கேற்றார். இவ்வாண்டு 3,399 கல்வியாளர்களுக்கு மொத்தம் 13,268 பரிந்துரைகள் முன்மொழியப்பட்டன.
அதிபர் விருது பெற்ற ஏழு ஆசிரியர்களும் அவர்களுடைய நிபுணத்துவ மேம்பாட்டின் ஒரு பகுதியாக வெளிநாடுகளுக்குக் கற்றல் பயணம் மேற்கொள்வர்.

