சிங்கப்பூர் ஒரு நியாயமான, நேர்மையான, அனைவரையும் உள்ளடக்கும் சமூகத்தைக் கொண்டிருக்க நமது கல்வி முறை ஒரு திறவுகோலாக இருக்க வேண்டும் என்று கல்வி மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் சூலிங் தெரிவித்துள்ளார்.
அதிபர் உரை மீதான விவாதத்தில் நேற்று பேசிய திருவாட்டி சுன், சமூக அளவில் அனைவருக்கும், குறிப்பாக குறைந்த வாய்ப்புகளுடன் வாழ்க்கையைத் தொடங்கியவர்களுக்கு, அனைவருக்கும் உள்ள சம அளவிவான வாய்ப்புகள் தங்களுக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்க உதவக்கூடிய வகையில் கல்வி எப்போதும் இருந்து வந்துள்ளது என்றும் விளக்கினார்.
"தங்களை மட்டும் நினைத்துக்கொண்டு சுயமாகப் பூர்த்தி செய்து கொள்ளும் மனப்பான்மை சிங்கப்பூரில் இருக்கக்கூடாது என்று நமது சமூக உணர்வுகள் அறிவுறுத்துகின்றன என்று நம்புகிறேன். தாங்கள் மட்டுமே பயன் அடைய வேண்டும் என்ற மனப்போக்கு நம்மிடைய பிளவை ஏற்படுத்தி, ஒன்றிணைந்து செயல்படும் நமது வழக்கத்துக்கு ஊறு விளைவித்துவிடும்.
"ஒன்றுபட்ட மக்கள் என்ற முறையில், நாம் நியாயமான, நேர்மையான, அனைவரையும் உள்ளடக்கும் சமூகத்துக்காக பாடுபட வேண்டும். அதன் மூலம் அனைவருக்கும், அவர்கள் எந்த பின்னணியிலிருந்து வந்தாலும் சமமான வாய்ப்புகள் கிட்டும்.
"இதன் தொடர்பில் அரசாங்கம் பாலர்பள்ளிக்கான கட்டணக் கழிவு களையும் அரசாங்க ஆதரவில் நடத்தப்படும் பாலர்பள்ளிகளில் இடங்களையும் உயர்த்தியுள்ளது. சில பாலர்பள்ளிகள் தங்கள் கட்டணங்களைக் குறைவாக வைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் நிதியாதரவு வழங்குகிறது," என்று திருவாட்டி சுன் விவரித்தார்.
இவை அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால், பாலர் பருவக் கல்விக்கு அரசாங்கம் எந்த அளவுக்கு ஆதரவு அளிக்கிறது என்பதும் ஒவ்வொரு பிள்ளைக்கும் நல்ல எதிர்காலம் அமைய அவர்களுக்கு சிறு வயதிலேயே நல்ல கல்வித் தொடக்கம் இருப்பது மிக முக்கியம் என்பதை மனதிற்கொண்டு செயல்படுவதும் தெளிவாகத் தெரியும் என்றும் அமைச்சர் சொன்னார்.
இதற்கிடையே, பாலர்பள்ளிகளில் இன்னும் அதிகமான பிள்ளைகள் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு என்ன செய்யலாம் என்பதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருவாட்டி சுன், பாலர்பள்ளிகளில் இன்னும் சேராத பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதையும் சுட்டினார்.
இந்தப் பிரச்சினைக்குத் தீ்ர்வு காண, இன்னும் அதிகமான சமூகப் பங்காளிகள் 'கிட்ஸ்டார்ட்' திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் குறைந்த வருமானமுடைய குடும்பங்களில் உள்ள ஆறு வயது வரையிலான பிள்ளைகளுக்கு உதவி கிடைக்க வழி ஏற்படுத்தப்படுகிறது.
மேலும் சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுக்கு, சாதாரண மற்றும் சிறப்புப் பள்ளிகளில் தரமான, கட்டுப்படியாகக்கூடிய கல்வி கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் அமைச்சர் கூறினார்.

