மேகன் குங் யு வெய் என்ற நான்கு வயது சிறுமியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் இரண்டு பேர் மேலும் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அந்தச் சிறுமியின் தாயாரான ஃபூ லி பிங், 24, என்பவரும் வோங் ஷி ஸியாங், 33, என்பவரும் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையானார்கள். சிறுமியை இந்த இருவரும் கொலை செய்து இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இருவரும் செப்டம்பர் 30ஆம் தேதி மறுபடியும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்கள்.
இருவருக்கும் பிணை மறுக்கப்பட்டு இருக்கிறது.
லிம் ஆ ஊ ரோட்டில் இருக்கும் ஒரு கூட்டுரிமை அடுக்குமாடி வீட்டில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த இருவரும் சிறுமியைக் கொலை செய்து இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
சிறுமியின் உடலை அவர்கள் நொவிலி சுவா ரோஷி, 30, என்ற வேறு ஒரு மாதுடன் செயல்பட்டு உபி அவென்யூ 1ல் இருக்கும் பாயா உபி தொழிற்பேட்டையில் உலோக தோம்பு ஒன்றில் மே மாதம் எரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சுவா ரோஷி மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை. அவருக்குச் சென்ற மாதம் $50,000 பிணை அனுமதிக்கப்பட்டது.
சுவா ரோஷியை மேற்கொண்டு விசாரணைக் காவலில் வைக்க வேண்டும் என்று அரசினர் தரப்பு கோரிக்கை விடுத்தது. அதை தற்காப்பு வழக்கறிஞரான தங்கவேலு எதிர்த்து வாதிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தன் கட்சிக்காரர் கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கவில்லை என்பதால் அவரை இதர இரண்டு பேருடன் சேர்க்காமல் தனித்து கையாள வேண்டும் என்று டிரைடென்ட் லா கார்ப்பரேஷன் என்ற சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த தங்கவேலு வாதிட்டார்.
சுவா ரோஷியின் வழக்கு அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கும் வோங் அந்த குற்றச்சாட்டுடன் தொடர்பில்லாத வேறு குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருக்கிறார். போதைப்பொருள் தொடர்பான பல குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார்.
கேலாங் ஈஸ்ட் அவென்யூ 1ல் இருக்கும் அடுக்குமாடி வீட்டில் இரண்டு சமுராய் கத்திகளை வோங் வைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.
அதே வீட்டில் அவர் ஆடவர் ஒருவரைத் தாக்கி இருக்கிறார் என்றும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது.


