சாங்கி விமான நிலையக் குழுமத்தின் தலைவர் லியூ முன் லியோங் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த குமாரி பார்த்தி லியானி, அவரது வீட்டில் $34,000 மதிப்பிலான பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
திரு லியூவின் வீட்டில் 2007 முதல் 2016ஆம் ஆண்டு வரை பணிப்பெண்ணாக இருந்த குமாரி பார்த்தி, அந்தக் குற்றச்சாட்டுக்காக தனக்கு விதிக்கப்பட்ட ஈராண்டு, இரு மாத சிறைத் தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்திருந்தார்.
சட்ட விரோதமாக அமர்த்தப்பட்டதன் தொடர்பில் அந்தப் பெண் புகார் அளிப்பதைத் தடுப்பதற்காக, அந்தப் பெண்ணின் மீது குற்றம் சாட்டப்பட்டதாக, அந்தப் பெண்ணின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் அனில் பால்சந்தானி குறிப்பிட்டார்.
திரு லியூவின் வீட்டில் பணி புரிந்தது தவிர, அவரது அலுவலகம் மற்றும் திரு லியூவின் மகன் கார்லின் வீட்டிலும் பணிபுரியுமாறு இந்தோனீசியரான குமார் பார்த்தி பணிக்கப்பட்டதாக திரு பால்சந்தானி தெரிவித்தார்.
குமாரி பார்த்தி திருடியதாகக் கூறப்படும் பொருட்கள் தொடர்பாக திரு லியூவின் குடும்பத்தார் அளித்த தகவல்களில் முரண்பாடுகள் இருந்ததாகவும் திரு கார்ல் லியூவின் வாக்குமூலம் சந்தேகத்துக்கு உரியதாக இருந்ததாகவும் நீதிபதி தெரிவித்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக குமாரி பார்த்தி வேலைக்குச் செல்லாததைக் குறிப்பிட்ட திரு பால்சந்தானி, அவருக்கு இழப்பீடு கோருவதன் தொடர்பில் விண்ணப்பிக்க இருப்பதாகக் குறிப்பிட்டார்.