நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப கொள்கை அளவில் அரசாங்கம் ஒப்புக்கொண்டு இருக்கிறது. தொடர்புத் தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் நேற்று நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்தார்.
இதன் தொடர்பிலான தொழில்நுட்ப மற்றும் அமலாக்க விவரங்களைத் தமது அமைச்சு ஆராயும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவதன் தொடர்பில் அரசாங்கம் ஏற்கெனவே கொண்டுள்ள ஐயப்பாடுகளை இன்னமும் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், இருந்தாலும் உலக அளவிலும் தொழில் நுட்பத் துறையிலும் இடம்பெற்று வரும் புதிய போக்குகளைச் சுட்டிக்காட்டினார்.
அத்தகைய புதிய போக்குகள் இணைய ஒளிபரப்புகளைப் பொது இடமாக ஆக்கி இருக்கின்றன. இதர நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக மன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைக் காண முடிகிறது என்றும் திரு ஈஸ்வரன் கூறினார்.
நாடாளுமன்றம் என்பது தேசிய விவகாரங்களைப் பற்றி மிக முக்கிய கவனத்துடன் விவாதிப்பதற்கான ஓர் அரங்காகும். நாடாளுமன்றத்தில் இடம்பெறும் விவாதிப்புகள் மும்முரமாக இருக்க வேண்டும்.
இருந்தாலும் தொனி விவேகமாக இருக்க வேண்டும் என்று திரு ஈஸ்வரன் தெரிவித்தார். சிங்கப்பூரர்களின் அக்கறைக்குரிய அம்சங்களுக்கு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படுகின்றன. கேள்விகள் கேட்கப்படுகின்றன.
அவற்றுக்குப் பதில்கள் அளிக்கப்படுகின்றன என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்ட உறுப்பினர்கள் விரும்புகிறார்கள் என்பதால் உயிரோட்டமிக்க, ஆர்வமிக்க விவாதிப்புகள் தவிர்க்க முடியாதவை என்றும் அவை தேவையானதாகக் கூட இருக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இருந்தாலும் உறுப்பினர்கள் பிரச்சினைகளையும் அவற்றின் சிக்கலான நிலவரங்களையும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் வெறுமனே குரல் கொடுப்பதில் பயனில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டியது முக்கியம் என்றாரவர்.

