சிங்கப்பூரில் ஆட்களை வேலையில் சேர்க்கும்போது பாரபட்சத்துடன் நடந்துகொள்வதாகக் சந்தேகிக்கப்படும் நிறுவனங்களின் பெயர்களைக் கண்காணிப்புப் பட்டியலில் வெளியிட்டால் எதிர்விளைவுகள் ஏற்படும் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அப்படிச் செய்தால் அது அத்தகைய சந்தேக நிறுவனங்கள் உள்ளூர் ஊழியர்களை வேலையில் சேர்க்க எடுக்கும் முயற்சிகளைப் பாதித்துவிடும் என்று அவர் குறிப்பிட்டார். அதிபர் உரை மீதான விவாதம் நேற்று நடாளுமன்றத்தில் ஐந்தாவது நாளாக நடந்தது.
ஊழியர்களைச் சேர்க்கும்போது பாரபட்சத்துடன் நடந்துகொள்ளவதாக சந்தேதிக்கப்படும் நிறுவனங்களின் பெயர்களைக் கண்காணிப்புப் பட்டியலில் வெளியிடுமாறு மன்றத்தில் பல உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததற்குப் பதில் அளித்து அமைச்சர் பேசினார்.
வெளிநாடுகளைச் சேர்ந்த பட்டத்தொழிலர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள், நிபுணர்கள் (பிஎம்இடி) ஆகியோரை அதிக விகிதாச்சாரத்தில் கொண்டுள்ள 400 நிறுவனங்கள் இப்போது அந்தக் கண்காணிப்புப் பட்டியலில் உள்ளன.
இருந்தாலும் அந்த நிறுவனங்கள் எந்த விதியையும் மீறவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார். சில முதலாளிகளுக்கு உள்ளுர் ஆள்சேர்ப்பு வழிகள் பற்றி உண்மையிலேயே தெரியவில்லை அல்லது வெளிநாட்டில் செயல்படும் தலைமையகங் கள் பிறப்பித்துள்ள உத்தரவுகளுக்கு ஏற்ப அத்தகைய ஆட்சேர்ப்புகள் வரம்புக்குட் பட்டுள்ளன என்பது புலன்விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
அவை செய்த எம்ப்ளாய்மெண்ட் பாஸ் மனுக்கள் நிறுத்திவைக்கப்பட்டு அதேவேளையில் அத்தகைய நிறுவனங்களுடன் அதிகாரிகள் தொடர்புகொண்டு ஊழியர் வள நடைமுறைகளை மேம்படுத்த உதவுகிறார்கள். பல நிறுவனங்கள் ஓராண்டுக்குள்ளேயே அந்தக் கண்காணிப்புப் பட்டியலில் இருந்து வெளியேறிவிட்டன என்று அமைச்சர் விளக்கினார்.
விதிகளை மீறியதற்காக இந்த ஆண்டில் 90 முதலாளிகள் வெளிநாட்டினரை வேலையில் அமர்த்து வதற்கான சலுகைகளை இழந்துவிட்டனர் என்றார் அவர்.
அந்தக் கண்காணிப்புப் பட்டியலில் அரசாங்கம் தொடர்புடைய தெமாசெக் தொடர்பான நிறுவனங்கள் எதுவும் இல்லை என்றும் அந்தப் பட்டியலில் இருந்து வெளியேற வேண்டி இருக்கின்ற நிறுவனங்கள் 10%க்கும் குறைவு என்றும் அமைச்சர் கூறினார்.

