பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது மற்ற பயணிகளின் கண்கள் கைபேசியின் மீது பதிந்து இருக்க, பட்டப் படிப்பு பயிலும் 19 வயது குமாரி வேலரி லீயும் அவரின் சகோதரர் 22 வயது நிக்கலசும் ஏதேனும் இடர்ப்பாடு தென்படுகிறதா எனக் கண்காணித்து வருகின்றனர்.
உடன்பிறப்புகள் இருவரின் கவனமெல்லாம் எவரேனும் சந்தேகத்திற்குரிய நடந்துகொள்கின்றனரா அல்லது ஐயத்திற்கிடமான பொருட்கள் ஏதும் உள்ளதா எனக் கண்காணிப்பர்.
இவ்விருவருடன், போலிசின் 'ரைடர்ஸ் ஆன் வாட்ச் (ஆர்ஓடபிள்யூ)' திட்டத்தில் ஏறக்குறைய 48,000 பேர் தொண்டூழியர்களாக இணைந்து உள்ளனர். பொதுப் போக்குவரத்தில் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் கடந்த ஆண்டில் இந்தச் சமூகக் காவல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
"ஒவ்வொருக்கும் பொதுப் போக்குவரத்து அவசியம். ஆகையால், ஒவ்வொருவரின் பாதுகாப்பை உறுதிசெய்வதும் முக்கியம்," என்றார் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 'ஆர்ஓடபிள்யூ' திட்டத்தில் சேர்ந்த குமாரி லீ.
பொதுப் போக்குவரத்தில் நிகழ்ந்த அண்மைய குற்றங்கள் குறித்தும் வித்தியாசமாகத் தாம் எதையும் காண நேர்ந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குறுஞ்செய்தி மூலமாக அவர் அவ்வப்போது தகவல்களைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில், இத்திட்டத்தில் மேலும் அதிகமானோரைத் தொண்டூழியர்களாக ஈர்த்து, குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் சுவரொட்டி மூலம் புதிய விழிப்புணர்வுப் பிரசாரத்தை போலிஸ் நேற்று தொடங்கியிருக்கிறது.
பொதுப் போக்குவரத்தில் அந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவதாக போலிஸ் தெரிவித்தது.
இந்த 'ஆர்ஓடபிள்யூ' திட்டத்திற்குப் பயணிகள் ஆதரவாக இருந்து வருவது ஊக்கமளிப்பதாக உள்ளது என்று போலிஸ் போக்குவரத்துத் தளபத்தியத்தின் தலைவரான திருவாட்டி ஃபேனி கோ கூறினார்.

