பூன் லேயில் மனைவியைக் கொலை செய்துவிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஆடவரைத் தடுப்புக் காவலில் வைத்து, அவரது மனநலத்தைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
சாங்கி சிறைச்சாலையில் உள்ள வளாக மருத்துவ நிலையத்தில் வைத்து குய் ஹுவான், 24, என்ற அந்தச் சீன நாட்டவரின் மனநலத்தைக் கண்காணிப்பதற்காக அவரைத் தடுப்புக் காவலில் வைக்கும்படி அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
கடந்த மாதம் 27ஆம் தேதி புளோக் 211 பூன் லே பிளேசில் உள்ள நடைபாதையில் அந்த ஆடவரின் மனைவி திருவாட்டி லியாங் ஸுக்கியூ, 26, அசைவின்றி காணப் பட்டார். சம்பவ நாளன்று மாலை 6.30 மணியளவில் உதவி கோரி அழைப்பு வந்ததாக போலிஸ் கூறியது. போலிஸ் வந்து பார்த்தபொழுது, திருவாட்டி லியாங் காயம்பட்டு, விழுந்து கிடக்கக் காணப்பட்டார்.
உடனடியாக இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், இரவு 9.50 மணிக்கு இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு இம்மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மனைவியைக் கொன்றது உறுதியானால், ஹுவானுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

