சாங்கி விமான நிலையக் குழுமத்தின் தலைவர் லியூ மன் லியோங்கிடமிருந்தும் அவரின் குடும்பத்திடம் இருந்தும் திருடியதாக இந்தோனீசியாவைச் சேர்ந்த ஒரு பணிப்பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
கிழக்கு ஜாவாவைச் சேர்ந்த அந்தப் பெண், $34,000க்கும் அதிக மதிப்புள்ள பொருட்களைத் திருடியதாகக் கூறும் குற்றச்சாட்டை எதிர்நோக்கினார். ஆனால் திருவாட்டி பார்த்தி லியானி (படம்) என்ற அந்த 46 வயது மாது உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார்.
தீர்ப்புக்குப் பிறகு ஸூம் செயலி வழியாக மொழி பெயர்ப்பாளர் உதவியுடன் பேசிய அவர், லியூ குடும்பத்தினர் மீது தனக்கு எந்த வெறுப்பும் இல்லை என்றார். தான் அவர்களை மன்னித்துவிட்டதாகவும் அந்த முன்னாள் பணிப்பெண் கூறினார்.
இருந்தாலும் லியூ குடும்பத்திடமிருந்து இழப்பீடு கேட்கலாம் என்று அந்த மாதும் அவருக்காக வாதாடிய வழக்கறிஞர் அனில் பால்சந்தனியும் திட்டமிடுகிறார்கள்.
விசாரணையின்போது அது பற்றி தன் குடும்பத்தாரிடம் தெரிவித்தால் அவர்கள் மிகவும் கவலைப்படுவார்கள் என்பதால் எதையும் திருவாட்டி பார்த்தி தெரிவிக்கவில்லை.
பொருட்களைத் தவறான முறையில் வைத்திருந்ததாகக் கூறும் ஒரு குற்றச்சாட்டு இன்னமும் நிலுவையில் இருப்பதால் அந்த மாது இப்போதைக்கு சிங்கப்பூரை விட்டு செல்ல முடியாது. இருந்தாலும் தன் நாட்டுக்குச் சென்றதும் தான் திரும்பி வரப்போவதில்லை என்றும் அங்கேயே சொந்தமாகத் தொழில் தொடங்கப்போவதாகவும் அந்த முன்னாள் பணிப்பெண் தெரிவித்தார்.