சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக கிழக்கு ஆசியப் பயிலகத்தின் முன்னாள் இயக்குநரான பேராசிரியர் ஸெங் யோங்னியான், 58, தனக்கு எதிராகக் கூறப்படும் பாலியல் தொல்லை புகார்கள் அனைத்தையும் மறுத்து இருக்கிறார்.
இருந்தாலும் அத்தகைய புகார்கள் பற்றி பல்கலைக்கழகம் தொடர்ந்து புலன்விசாரரணை நடத்தி வருகிறது. சமூக ஊடகத்தில் அவருக்கு எதிராக இதுபோன்ற பல்வேறு புகார்கள் சென்ற மாதம் தலைதூக்கின.
அவற்றைத் தெரிவித்தவர்களில் குறைந்தது இரண்டு பேர் அந்த முன்னாள் இயக்குநருக்கு எதிராக பாலியல் தொல்லை குற்றப் புகார் களைச் சுமத்தினார்கள்.
இருந்தாலும் பேராசிரியர் ஸெங் எல்லா புகார்களையும் திட்டவட்டமாக மறுத்து இருக்கிறார் என்று அவருடைய வழக்கறிஞர்கள் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
பேராசிரியர் ஸெங்கிற்கு எதிராக பாலியல் தொல்லை புகார்களைச் சமூக ஊடகத்தில் குறிப்பிட்ட இரண்டு பேர், என்யுஎஸ் அல்லது இஏஐ ஊழியர் என்று தங்களைத் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
பேராசிரியர் ஸெங் பல்கலைக்கழகத்தில் இருந்தும் அதனுடைய கிழக்கு ஆசிய பயிலகத்தில் இருந்தும் விலகிவிட்டார்.
அதற்கும் பேராசிரியருக்கு எதிரான குறைகூறல்களுக்கும் புகார்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் சமூக ஊடகங்ககளில் தெரிவிக்கப்பட்டது.
அவர் புதிய பதவி ஒன்றை ஏற்றுக்கொண்டு அதற்கு வசதியாக பல்கலைக்கழகத்தில் இருந்து விலகிக்கொண்டு இருக்கிறார் என்று அவர்கள் தெரிவித்தார்கள்.
கிழக்கு ஆசியப் பயிலகத்தின் நடப்பு ஊழியர் என்று தன்னை கூறிக்கொண்ட ஒருவர், 2019 மே மாதம் போலிசில் புகார் ஒன்றைத் தாக்கல் செய்தார். 2018 மே மாதம் பாலியல் ரீதியில் அந்தப் பேராசிரியர் தன்னை தொல்லைப் படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
போலிசில் புகார் தாக்கலானதை பல்கலைக்கழகமும் போலிசும் உறுதிப்படுத்தின. இந்த விவகாரத்தில் தாங்கள் கடும் எச்சரிக்கை விடுத்ததாக போலிஸ் தெரிவித்தது.
அதேவேளையில், பல்கலைக்கழகம் விசாரணையைத் தொடங்கியது. பேராசிரியர் ஸெங்கிற்கு எதிராக வேறு ஓர் ஊழியர் போலிசில் புகார் செய்ததாகவும் தெரியவந்தது.
ஆனால் மேல் நடவடிக்கை எதுவுமின்றி இந்த விவகாரத்தை போலிஸ் முடித்துக்கொண்டது.