கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் பல் மருத்துவ நிபுணராக பள்ளிகளில் செயல்பட்டு வந்தவர் திருமதி பி.செல்வி இளங்கோவன். பழக்கப்பட்ட வேலை, நல்ல சம்பளம் என்றாலும் இதிலிருந்து மாறுபட்ட, புதிய அனுபவத்தை தேடிச் செல்ல அவரது மனம் விரும்பியது. விருப்பம் வளர்ந்ததால் நான்காண்டுகளுக்கு முன்னர், வேலையிலிருந்து விலகி உளவியல் தொடர்பான பட்டப்படிப்பை ஒன்றரை ஆண்டுகளுக்கு கற்கத் தொடங்கினார்.
தொடர்ந்து 2018ஆம் ஆண்டில் வேலை குறித்து சிங்கப்பூர் ஊழியரணி வேலைவாய்ப்பு ஆலோசகரைச் சந்தித்து பேசியதில், பாலர் பள்ளி ஆசிரியராவதற்கு பொருத்தமாக இருப்பார் என அவரிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஒரு வேலைச் சந்தைக்கு சென்று E-Bridge பாலர் பள்ளியில் முழுநேர ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தார்.
"பிள்ளைகளுடன் இன்னும் அணுக்கமாகச் செயல்படலாம் என எண்ணினேன். புதிய வேலையில் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்பதில் திடமாக இருந்தேன்," என்று கூறினார் திருமதி செல்வி, 56.
பள்ளியில் இணை ஆசிரியராகச் சேர்ந்த சில மாதங்களுக்குப் பிறகு வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டத்தில் (PCP) இடம்பெறும் ஆரம்பக்கல்வி தொடர்பான பட்டயக்கல்வியை ஓராண்டு பயிலும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
இந்த நிபுணத்துவ பட்டயக்கல்வி சான்றிதழ் ஊழியரணி திறன்தேர்ச்சி திட்டத்தில் (WSQ) அங்கீகரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டிலிருந்து காலையில் பள்ளிக்கூட வேலைமுடிந்த பின்னர் மூன்று மணிநேர வகுப்புகளுக்கு திருமதி செல்வி செல்லத் தொடங்கினார்.
மாணவர், ஆசிரியர் என்னும் இரு பொறுப்புகளுக்கும் ஈடுகொடுத்து ஓராண்டு முழுவதையும் சமாளிக்க தமக்கு வயது ஒரு தடையாக இருக்கவில்லை என்றார் அவர். பிள்ளைகளின் வளர்ச்சித் திறன்களை மேம்படுத்துதல், வகுப்புகளை திறம்பட நடத்துதல், விளையாட்டுகளை உருவாக்குதல் போன்ற உத்திகளை அவர் கற்றுக் கொண்டார். பட்டயக்கல்வியை முடித்து பள்ளியின் முழுநேர வேலைக்கு திரும்பியுள்ள திருமதி செல்வி, பாலர் வகுப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்.
வெளிப்புற விளையாட்டுகளில் ஈடு
படுவது, ஆடல், பாடல் கற்றுக்கொடுப்பது, படைப்பாற்றலை வெளிக்கொணரச் செய்வது என விருப்பம்போல் புதிய பணி அமைந்துள்ளது என மனநிறைவு தெரி விக்கிறார் அவர். பிள்ளைகளோடு பிள்ளையாக அவர்களுடன் சேர்ந்து விளையாடுவது, கற்பித்தலில் உற்சாகம் என ஆசிரியர் பணியை பேரார்வத்துடன் தொடர்கிறார்.
"தினமும் பிள்ளைகளுடன் உரையாடி, அவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்கள் அடையவேண்டிய மேம்பாட்டிற்கு பங்காற்றுவதன் மூலம் மிகுந்த திருப்தி கிடைக்கின்றது," என்றார்
திருமதி செல்வி.
திறந்த மனப்பான்மையுடன், மிகுந்த ஆர்வத்துடன் இத்துறையில் துணிச் சலாகக் கால்பதிக்கலாம் என்று கூறும் திருமதி செல்வி, வாழ்நாள் கற்றலுக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டாக விளங்குகிறார்.
நல்ல வேலை, நல்ல சம்பளம் என்றபோதிலும் புதிய அனுபவங்களில் மனம் நாட்டம் கொண்ட தால் இன்று துடிப்புமிக்க பாலர் பள்ளி ஆசிரிய
ராக மாற்று வேலையில் மனநிறைவு கொள்கிறார் திருமதி செல்வி இளங்கோவன். பிள்ளைகளுடன் பேசி, பழகி, அவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்கள் அடையவேண்டிய முன்னேற்றத்திற்கு தம்மாலும் பங்களிக்க முடிகிறது என்பதை எண்ணி மகிழ்கிறார் அவர். புதிய வேலை, புதிய அனுபவம், புன்னகை பூக்கும்
மழலை முகங்கள்... இன்னும் என்ன?... இதோ அவர் விரும்பிய புதிய பாதையின் பின்னணி!

