மழை பெய்யும் போது பொதுவாக வீட்டில் மக்கள் ஒதுங்குவது வழக்கம். ஆயினும், கொவிட்-19 மிரட்டலைக் கடந்து வந்த கட்டுமான ஊழியர்கள் பலர் தற்போது வெயில் மழை பாராது தொடர்ந்து கடுமையாக உழைக்கின்றனர். இத்தகைய ஊழியர்களில் சிலருக்கு காரில் சென்ற ஒருவர் உணவு வழங்கியதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ச்சர்ட் ரோட்டை நோக்கிச் செல்லும் பினாங்கு ரோட்டில் இதனை நேரில் கண்ட டாவ்ன் (Dawn) என்பவர் ஸ்டாம்ப் தளத்திடம் தெரிவித்தார்.
"சிங்கப்பூரர்களான நம்மில் பலரும் அறியாத தியாகங்களை இந்த ஊழியர்கள் தங்களது குடும்பத்திற்காகச் செய்துள்ளனர். உற்றார் உறவினரை விட்டு அந்நிய தேசங்களில் மறைவிலிருந்தே உழைக்கின்றனர்," என்று டாவ்ன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
கொவிட்-19 நிலவரத்தால் கட்டுமானத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், அத்துறையில் நிறுவனங்களின் செயல்பாடுகள் மீதான தாக்கம் ஏற்ற இறக்கமாக உள்ளது.
கொவிட்-19 நோய் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்த காலத்தைக் கடக்கவும் பொருளியல் நடவடிக்கைகள் மீண்டும் தொடர்ந்தபோது தங்களை அவற்றுக்குத் தயார்ப்படுத்திக்கொள்ள பெரிய நிறுவனங்களிடம் போதிய வளங்கள் இருந்தன. எனினும், நோய் முறியடிப்பு காலத்தில் கட்டுமானப் பணிகளைத் தொடர முடியாத அதேவேளையில் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க சிறிய நிறுவனங்கள் நிதி நெருக்கடியைச் சந்தித்தன

