கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனியார் கூட்டுரிமை வீடுகள் மறுவிற்பனை ஈராண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்வு கண்டது.
சென்ற மாதத்தில் 1,052 கூட்டுரிமை வீடுகள் கைமாறின. முந்தைய ஜூலை மாதத்தைக் காட்டிலும் இது 7% அதிகம்.
அதேபோல, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை ஒப்புநோக்கையில், இது 36.3% அதிகம். சொத்துச் சந்தை நிறுவனமான 'எஸ்ஆர்எக்ஸ் பிராப்பர்ட்டி'யின் இணையத் தளத்தில் நேற்று வெளியிடப் பட்ட முன்னோடி மதிப்பீட்டில் இந்தப் புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.
ஏறத்தாழ 60% பரிவர்த்தனைகள் மத்திய வட்டாரத்திற்கு வெளியே இடம்பெற்றன. வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் மறுவிற்பனையும் சென்ற மாதத்தில் ஏற்றம் கண்டதை எஸ்ஆர்எக்ஸ் கடந்த வாரம் வெளியிட்ட முன்னோடி மதிப்பீடுகள் கூறின.
அதன்படி, தொடர்ந்து 3வது மாதமாக 2,400க்கும் அதிகமான வீவக வீடுகள் கைமாறின. அதேபோல, புதிய வீவக வீடுகளுக்கும் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

