நியூசிலாந்து, புருணை ஆகிய நாடுகளுக்குத் தன் எல்லையை சிங்கப்பூர் திறக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்நாடுகளைச் சேர்ந்த 14 பேர் நேற்று சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கினர்.
இவர்களில் ஐவர் புருணையைச் சேர்ந்தவர்கள் என்றும் எஞ்சியவர்கள் நியூசிலாந்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
மேலும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி வரையில் கிடைத்த தகவலின் படி, புருணையைச் சேர்ந்த 59 பயணிகளுக்கும் நியூசிலாந்தைச் சேர்ந்த 77 பேருக்கும் சிங்கப்பூர் வர அனுமதி அளித்துள்ளதாகவும் ஆணையம் குறிப்பிட்டது.
ஒரு வாரத்திற்கு முன்னரே இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டது.
இவ்வாறு வருகையளிப்போர், ‘விமானப் பயண அட்டை திட்டம்’ வழி அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்கீழ் குறுகிய கால பயணமும் சுற்றுப்பயணமும் அடங்கும்.
நாடுகளுக்கிடையே அத்தியாவசிய வர்த்தக மற்றும் அதிகாரபூர்வ பயணங்களுக்காக திறக்கப்பட்டுள்ள ‘பரஸ்பர பச்சை தட’ (reciprocal green lane) ஏற்பாட்டிலிருந்து இது மாறுபட்டது.
புருணை, நியூசிலாந்து நாடுகளில் கிருமித்தொற்று நிலவரம் கட்டுக்குள் உள்ளது என்றும் இந்த இரு நாடுகளிலிருந்து வருவோரால் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கும் சாத்தியம் குறைவு என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.
இருப்பினும் இங்கு வந்தவுடன் பயணிகள் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். முடிவுகள் வெளிவரும்வரை அவர்கள் தாங்கள் திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றும் கூறப்பட்டது.