அவசர வாகனங்கள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் உள்ள வழிகளைக் குறிக்கும் அறிவிப்புப் பலகைகளைப் பெற்றிராத வீவக பேட்டைகள் விரைவில் அவற்றைப் பெற உள்ளன.
கடந்த மாதம் 'த பீக் அட் தோ பாயோ'வில் நிகழ்ந்த தீச்சம்பவத்திற்குப் பிறகு இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.
அச்சம்பவம் நிகழ்ந்தபோது விரைந்து வந்த தீயணைப்பு வாகனம் ஒன்று அந்தப் பேட்டையின் உள்ளே செல்ல வேண்டிய வழிக்குப் பதில் கவனக்குறைவாக, வெளியேறுவதற்கான வழியில் நுழைய முயன்றது.
வெளியேறும் வழியில் வாகனம் திரும்புவதற்குப் போதுமான இடமில்லை என்பதோடு அவற்றில் வாகனம் நுழையலாமா என்பது குறித்த தகவல் இல்லை.
ஆகஸ்ட் 29ஆம் தேதி அதிகாலை புளோக் 138சி, லோரோங் 1ஏ தோ பாயோ கட்டடத்தில் தீப்பிடித்தைத் தொடர்ந்து சுமார் 300 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தீப்புண்களுடனும் மூச்சுத்திணறலுடனும் மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
கடந்த 2012ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்தப் பேட்டையில் அவசர வாகனங்கள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் உள்ள வழிகள் குறித்த அறிவிப்புப் பலகை வைக்கப்படவில்லை.
தீத்தடுப்பு விதித்தொகுப்பின்கீழ் அத்தகைய அறிவிப்புகள் கட்டாயம் என 2018ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதிகாலை 2.55 மணியளவில் தீ மூண்டதாக வந்த அறிவிப்பைத் தொடர்ந்து 11 வாகனங்கள் அந்தப் பேட்டைக்குச் சென்றதாகவும் அவற்றில் 10 வாகனங்கள் பிரச்சினையின்றி சம்பவ இடத்தை அடைந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
'த பீக்' கட்டடத்திலும் நுழைவாயில், வெளிவாயிலைக் குறிக்கும் அறிவிப்புப் பலகைகளைப் பெற்றிராத மற்ற வீவக கட்டடங்
களிலும் 2007ஆம் ஆண்டின் தீயணைப்பு விதித்தொகுப்பின்கீழ் அறிவிப்புப் பலகைகளைப் பொருத்துவது குறித்து வீவகவுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் எஸ்சிடிஎஃப்பின் அறிக்கை குறிப்பிட்டது.

