சிங்கப்பூரின் பிரபலமான நான்கு சந்தைகளில் முன்பு விதிக்கப்பட்டிருந்த நுழைவுக் கட்டுப்பாடுகள் நாளை முதல் முழுமையாகத் தளர்த்தப்படுகின்றன. இருந்தாலும், ஒரு முறைக்கு எத்தனை பேர் சந்தைக்குள் செல்லலாம் என்பதற்கான வரம்பு நீடிக்கும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று தெரிவித்தது.
கேலாங் சிராய் சந்தை, ஈசூன் ரிங் ரோடு புளோக் 104/105ல் உள்ள சொங் பாங் சந்தை, மார்சிலிங் லேன் புளோக் 20/21ல் உள்ள சந்தை, ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 52 புளோக் 505ல் உள்ள சந்தை ஆகியவையே அந்த நான்கு சந்தைகள். சேஃப்என்ட்ரி, ஒரு மீட்டர் பாதுகாப்பான தூர இடைவெளி ஆகிய கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதியிலிருந்து, வாரயிறுதி நாட்களில் இந்தச் சந்தைகளுக்கான நுழைவுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோது, சந்தைக்கு வெளியே கூடும் கூட்டத்தின் அளவு கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்தது என்றும் வாரியம் விவரித்தது.
வார நாட்களில் சந்தைகளுக்கு வெளியே, மக்கள் வரிசை இல்லாமல் இருந்தது அல்லது வரிசை மிகக் குறுகியதாக இருந்தது.
குறிப்பாக, கேலாங் சிராய் சந்தையிலும் மார்சிலிங் லேன் சந்தையிலும் இந்த நிலைமை இருந்தது.
"மேற்குறிப்பிட்ட நான்கு சந்தைகளிலும் வார நாட்களில் வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சராசரியாக 18% முதல் 48% வரை குறிப்பிடத்தக்க அளவில் கூடியது.
"இது நான்கு சந்தைகளில் உள்ள கடைக்காரர்களுக்கு அதிக வியாபாரத்தைக் கொடுத்துள்ள அதேவேளையில் வாடிக்கையாளர்களின் வருகையில் நீக்குப்போக்கையும் தந்துள்ளது," என்றும் வாரியம் சொன்னது.
மூன்று வாரங்களுக்கு முன் இருந்ததைப் போலவே, வாரயிறுதி நாட்களில் கூடும் கூட்டத்தில் பெரிய மாற்றம் இல்லை என்று குறிப்பிட்ட வாரியம், மிக நீண்ட வரிசை கேலாங் சிராய் சந்தையில் காணப்பட்டது என்றும் அங்கு 100க்கு மேற்பட்டவர்கள் வரிசையில் நின்றனர் என்றும் கூறியது.
ஒப்புநோக்க, மார்சிலிங் லேன் சந்தைக்கு வெளியே வரிசையில் சுமார் 70 பேர் நின்றனர்.
இதர இரு சந்தைகளிலும் வாரயிறுதி நாட்களில் வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருப்பதைக் காண முடியவில்லை.
பரபரப்பான இரு சந்தைகளில் ஒன்றான கேலாங் சிராய் சந்தையில் ஒரு வாடிக்கையாளர் வரிசையில் நின்று சந்தைக்குள் செல்ல சுமார் 20 நிமிடங்கள் ஆகின்றது. மார்சிலிங் லேன் சந்தையின் வாடிக்கையாளர்கள் சந்தைக்குள் செல்ல சுமார் 15 நிமிடங்கள் எடுத்தது என்று கூறிய வாரியம் இது சமாளிக்கக்கூடிய வரிசைதான் என்றும் கருத்துரைத்தது.
இந்த நான்கு பிரபலமான சந்தைகளில் நுழைவுக் கட்டுப்பாடுகள் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி முதல் முதலில் நடப்புக்கு வந்தன.

