கொவிட்-19 கொள்ளைநோய் தொடர்பான அறிகுறிகளை துல்லியமாகக் கண்டறிந்து ஒருங்கிணைந்த கண்காணிப்பு முறைக்கு அனுப்பும் ‘விவேக முகக்கவசத்தை’ உள்ளூர் அறிவியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த விவேக முகக்கவசத்தை அணிந்திருப்பவரின் சரும வெப்பநிலை, ரத்தத்தில் உள்ள பிராணவாயு அளவு, ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு ஆகிய கொவிட்-19 தொடர்பிலான அனைத்து அறிகுறிகளையும் முகக்கவசங்களில் உள்ள உணர் கருவி கண்டறியும்.
இதுபோன்ற நோய் கண்டறியும் முறையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தங்கள் குழுவுக்கு நோய் முறியடிப்புக் காலத்தின்போது தோன்றியது என்று கூறிய நிபுணர்கள் குழுவின் உறுப்பினரான இணைப் பேராசிரியர் லோ சியான் ஜுன், “கொவிட்-19 நோயாளிகள் தனிமைப்படுத்தப்படும் பகுதியில் வைக்கப்பட்டபோது, முன்களப் பணியாளர்கள் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை சென்று அவர்களின் உடல் வெப்பநிலை, ரத்தத்தில் உள்ள பிராணவாயு அளவு போன்றவற்றை அறிந்து வந்தார்கள்,” என்றும் விவரித்தார்.
பேராசிரியர் லோ, ஏ-ஸ்டார் அமைப்பின் ஆய்வு மற்றும் பொறியியல் பிரிவின் தலைமை இயக்கு நராகப் பணியாற்றுகிறார்.
“நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவமனைகளிலும் கிருமியின் தாக்கம் இருப்பதை கண்டறிந்த நாங்கள், நோயாளிகளைக் கவனித்துக்கொள்ளும் முன்களப் பணியாளர்களைப் பாதுகாக்க ஏதாவது செய்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம்,” என்றார் பேராசிரியர் லோ.
“நோயாளிகள் கண்காணிப்பின்போது தாதியர் பெரிய சாதனங்களை அறைக்கு அறை தள்ளி கொண்டு போவது அவர்களுக்கு மேலும் அசௌகரியத்தைக் கொடுக்கும் அதேவேளையில் நோய் பரவும் அபாயத்தையும் அதிகரிக்கும் என்றும் பேராசிரியர் லோ சொன்னார்.
மருத்துவமனைகளில் உள்ள கொவிட்-19 நோயாளிகளுக்கு விவேக முகக்கவசங்கள் கொடுக்கப்படலாம். அதன் மூலம் அவர்களின் நோய் தொடர்பான அறிகுறிகளைத் தூரத்தில் இருந்தவாரே கண்டறிய முடியும் என்பதால், முன்களப் பணியாளர்களுக்கு வரக்கூடிய அபாயம் நீக்கப்படலாம்.
மூன்று விதமான உணர் கருவிகளை ஒருங்கிணைக்கும் ஒரு சில்லுக்குள் கொண்டு வரும் முறை இப்போது சோதிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்ட நிபுணர்கள் குழு, அந்தக் கருவிக்குள் புளுடூத் கருவியும் இணைக்கப்படுவதால், நோய்க்கான அறிகுறிகளை கைபேசி மூலமாகவும் தெரிந்துகொள்ளலாம் என்றனர்.
முகக்கவசத்தில் உள்ள உணர் கருவி, தோல் போன்ற மெல்லிய பொருளுக்குள் வைக்கப்படுவதால், முகக்கவசத்தைக் கழுவும்போது அது உணர் கருவியைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளும் என்றும் விளக்கப்பட்டது.