அப்பர் பூன் கெங் சாலை புளோக் 14ல் உள்ள சில வீடுகளுக்குள் வெளவால்கள் நுழைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வௌவால்களில் கொவிட்-19 கிருமிகள் இல்லை என்று மனிதவள, உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட புளோக் ஜாலான் புசார் குழுத் தொகுதியைச் சேர்ந்தது. புளோக்குக்கு அருகில் இருக்கும் பழ மரங்களில் இருக்கும் அந்த வௌவால்கள் வீடுகளுக்குள் பறந்து வருவது குறித்து குடியிருப்பாளர்கள் தெரிவித்ததாக அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திருமதி டியோ கூறினார்.
கொவிட்-19 கிருமிகள் வௌவால்களிலிருந்து வருவதாகக் கூறப்படுவதால் குடியிருப்பு வட்டாரங்களில் அவை இருப்பது குறித்து குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கொவிட்-19 கிருமிகள் வௌவால்களிலிருந்து வருவதாக கடந்த மே மாதத்தில் உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் கூடுதல் வௌவால்கள் காணப்படுவதாக அதிகாரிகளிடம் வழக்கத்துக்கு மாறாக பல புகார்கள் செய்யப்படுவதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது. அக்காலகட்டத்தில், உயிருள்ள வௌவால் ஒன்றை ஒருவர் குப்பைத் தொட்டிக்குள் வீசியதாகக் கூறப்படுகிறது.
வௌவால்களிலிருந்து கொவிட்-19 கிருமிகள் வருவதாக குடியிருப்பாளர்கள் கவலைப்படுகின்றனர். தங்கள் வீட்டுக்குள் பறந்து வரும் வௌவால்களை வெளியேற்றுவதற்கான வழி தெரியாமல் சிரமப்படுகின்றனர்,” என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திருமதி டியோ பதிவிட்டார்.
இதுதொடர்பாக தேசிய பூங்காக் கழகத்துடன் ஜாலான் புசார் நகரமன்றம் தொடர்புகொண்டதாக அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களைச் சென்று பார்க்க அதிகாரி ஒருவரையும் வௌவால் ஆய்வு நிபுணர் ஒருவரையும் கழகம் அனுப்பிவைத்ததாக அவர் கூறினார்.
அங்குள்ள வௌவால்களின் உடலில் கொவிட்-19 கிருமிகள் இல்லை என குடியிருப்பாளர்களுக்கு அவர்கள் உறுதி அளித்துள்ளனர். இயற்கை சுற்றுச்சூழலில் வௌவால்கள் அளிக்கும் முக்கியப் பங்கு குறித்தும் குடியிருப்பாளர்
களிடம் பகிரந்துகொள்ளப்பட்டது.
பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதிலும் மகரந்தங்களைப் பரப்புவதிலும் வௌவால்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக குடியிருப்பாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
வௌவால்கள் தங்கள் வீடுகளுக்குள் வருவதைத் தடுக்க சில வழிமுறைகளைக் குடியிருப்பாளர்களுக்கு அதிகாரிகள் கற்றுக்கொடுத்தனர். பளபளப்பான பொருட்களை வாசலிலும் சன்னல்களிலும் மாட்டுவது பூச்சி தடுப்பு வலைகளை சன்னல்களில் மாட்டுவது போனற வழிமுறைகளை குடியிருப்பாளர்களுடன் அதிகாரிகள் பகிர்ந்துகொண்டனர்.
அதுமட்டுமல்லாது, பாதிக்கப்பட்ட புளோக்கிற்கு அருகில் இருக்கும் அந்த பழ மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டுள்ளன.
இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்நோக்குபவர்கள் தேசிய பூங்காக் கழகத்தின் விலங்கு கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்புகொள்ள வேண்டும் என்று திருமதி டியோ தெரிவித்தார்.