தங்கள் நாட்டு மக்கள் அத்தியாவசியமான வர்த்தக மற்றும் அதிகாரத்துவ பயணங்களை மேற்கொள்ள வகை செய்யும் பொருட்டு, சிங்கப்பூரும் ஜப்பானும் இணக்கம் தெரிவித்து உள்ளன.
அந்த இணக்கத்தின்படி, இரு நாடுகளுக்கிடையிலான பயணங்கள் இம்மாதம் 18ஆம் தேதி தொடங்கும் என்று கூறப்பட்டது.
இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக பயணங்கள் ஆகாயப் போக்குவரத்து இணைப்பையும் மேம்படுத்துவதுடன் இருநாட்டுப் பொருளியல் மீட்சிக்கு ஆதரவளிக்கவும் செய்யும் என்று சிங்கப்பூர், ஜப்பான் ஆகியவற்றின் வெளியுறவு அமைச்சுகள் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் விவரித்தன.
இருவழி தடையற்ற பயணப் பாதை ஏற்பாடுகளை சிங்கப்பூர் மற்ற பல நாடுகளுடன் செய்திருந்தாலும் ஜப்பான் இன்னொரு நாட்டுடன் செய்துகொள்ளும் முதலாவது பரஸ்பர இருதரப்பு பயண ஏற்பாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இருவழி தடையற்ற பயணப் பாதை, எல்லை தாண்டிய பயணங்களையும் சம்பந்தப்பட்ட நாடுகளின் பொதுச் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வர்த்தகப் பரிமாற்றங்களை மீண்டும் தொடங்குவதற்கும் வழி செய்கிறது என்று சிங்கப்பூரும் ஜப்பானும் தெரிவித்தன.
பயணத்துக்கு முந்திய பரிசோதனை, சம்பந்தப்பட்ட நாட்டைச் சென்றடைந்தவுடன் மேற்கொள்ளப்படும் பரிசோதனை, நாட்டைச் சென்று சேர்ந்தவுடன் அடுத்த 14 நாட்களுக்குமான கட்டுப்படுத்தப்பட்ட பயண விவரங்களைத் தெரிவித்தல் போன்றவை இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அடங்கும்.
இதன் தொடர்பான, சுகாதார நெறிமுறைகள், விண்ணப்பிக்கும் வழிகள் போன்ற செயல்முறை விவரங்கள் ஜப்பான் வெளியுறவு அமைச்சின் இணையத்தளத்திலும் சிங்கப்பூரின் 'சேஃப் டிராவல்' இணையத்தளத்திலும் இம்மாதம் 18ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்.
பல கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும் வேளையில் சிங்கப்பூர் இதுவரை ஐந்து நாடுகளின் பயணிகளுக்கு அனுமதியளித்து உள்ளது.
ஜூன் 3ஆம் தேதி சிங்கப்பூரும் சீனாவும் இரு நாடுகளுக்கிடையிலான இருவழி தடை யற்ற பயணப் பாதையை அறிவித்தன. இந்த ஏற்பாடுகள் வழி பயணம் செய்வோர் 14 நாடுகள் தனிமைப்படுத்தும் உத்தரவிலிருந்து விலக்கு பெறுவார்கள்.
சிங்கப்பூர் பின்னர் ஆகஸ்ட் 17ஆம் தேதி மலேசியாவுடன் இருவழி தடையற்ற பயணப் பாதை ஏற்பாட்டை நீண்டகால வேலைக்கு அனுமதியளிப்பதற்காகச் செய்துகொண்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நியூசிலாந்து, புருணை நாடுகளின் பொதுவான பயணிகள் மேற்கூறப்பட்ட இரு பயண அனுமதியின்படி சிங்கப்பூர் வரத் தொடங்கினர். பின்னர் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புருணையின் மக்கள் இருவழி தடையற்ற பயணப் பாதை மூலம் சிங்கப்பூர் வரலாம்.
சிங்கப்பூருக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் அதிகாரத்துவ பயணங்கள் செப்டம்பர் 2ஆம் தேதி முதல் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் ஹாங்காங்கும் இதே ஏற்பாட்டின் மூலம் பயணங்களை தொடங்குவது பற்றி பேச்சு நடத்த சிங்கப்பூர் நேற்று முன்தினம் அழைப்பு விடுத்தது.

