திருத்தப்பட்ட சட்டம் வரும் திங்கட்கிழமை முதல் அமல்
தீ பற்றுவதைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குக் கடுமையான பாதிப்புகளை யாராவது ஏற்படுத்தினால் அவர்கள் மீது வரும் திங்கள் முதல் உடனடியாக வழக்குத் தொடுக்க முடியும்.
தீ மூளும்போது தப்பிச் செல்வதற்கான வழிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவது போன்ற குற்றங்களைச் செய்பவர்கள் இனிமேல் கடுமையான தண்டனைகளை எதிர்நோக்க வேண்டி இருக்கும்.
தீ பாதுகாப்புச் சட்டத் திருத்தங் கள் திங்கட்கிழமை முதல் நடப்புக்கு வருகின்றன. நாடாளுமன்றத்தில் சென்ற ஆண்டு நிறைவேறிய அந்தச் சட்டத் திருத்தங்கள், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு அதிக அதிகாரங்களை வழங்குகின்றன.
தீ பற்றாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அதிக ஒழுங்குமுறை மற்றும் அமலாக்க அதிகாரங்களை இந்தப் படை பெற்றிருக்க புதிய சட்டத் திருத்தங்கள் வகை செய்கின்றன.
அதோடு மட்டுமின்றி, எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் புதிய குற்றச்செயல்களும் புதிய சட்டத்தில் வரையறுக்கப்பட்டு இருக்கின்றன.
தொழில்துறை நிபுணத்துவர்கள் முறையாக மேற்பார்வையிடாமல் தீ பாதுகாப்புப் பணிகளுக்கு முறையாகச் சான்றிதழ் வழங்காமல் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டால் அவர்களுக்கு இனிமேல் கிடைக்கும் தண்டனை அதிகமாக இருக்கும்.
தீ எச்சரிக்கை ஒலி சாதனங்கள், தீ ஏற்படும் போது தண்ணீரை பீய்ச்சி அடிப்பதற்கான குழாய்கள் ஆகியவற்றைப் பொருத்துவது போன்ற தீ பாதுகாப்பு அம்சங்களைக் கட்டட உரிமையாளர்கள் கட்டாயம் மேம்படுத்த வேண்டும்.
இதனை செய்வதற்கான அதிகாரம் குடிமைத் தற்காப்புப் படைக்கு இருக்குமென தெரிவிக்கப்பட்டது.
இந்தப் படை கட்டட உரிமையாளர்களுடன் சேர்ந்து செயல்பட்டு அவர்களின் கட்டடங்களில் தீ பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்தும் என்று அறிக்கை ஒன்றில் உள்துறை அமைச்சு நேற்று தெரிவித்தது. தீ மூளாமல் தடுக்க கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் தேவை என்பது சென்ற ஆண்டு தெளிவாகத் தெரியவந்தது.
தீ தடுப்பு நடவடிக்கைகளில் தீயணைப்பாளர்கள் ஈடுபட்டபோது குறைபாடுடன் கூடிய தீ பாதுகாப்புச் சாதனங்களைப் பல இடங்களிலும் அவர்கள் கண்டார்கள்.
இதனையடுத்து கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் தேவை என்று வலியுறுத்தப்பட்டது.
இப்போதைய சட்டங்களின்படி, தீ பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஆபத்தை ஏற்படுத்துகின்ற தரப்புகளுக்கு இந்தப் படை எச்சரிக்கைக் கடிதங்களை அனுப்பும். அவற்றுக்குக் கீழ்படிய தவறினால்தான் நீதிமன்ற நடவடிக்கையைக் குடிமைத் தற்காப்புப் படை எடுக்க முடியும்.
ஆனால் இப்போது நடப்புக்கு வரவிருக்கும் புதிய சட்டத்தின்படி இந்தப் படை உடனடியாக நீதிமன்ற நடவடிக்கையில் இறங்கமுடியும்.
மருத்துவமனைகளாக, தாதிமை இல்லங்களாக, உடற்குறையாளர்களுக்கான இல்லங்களாக, ஊழியர் தங்கும் விடுதிகளாகப் பயன்படுத்தப்படும் கட்டடங்களில் அவசர கால ஆயத்த நடவடிக்கைகள் கட்டாயம் இடம்பெற்று இருக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சு நேற்றைய தனது அறிக்கையில் அறிவித்து இருக்கிறது.
வெவ்வேறான கட்டடங்களில் எந்தெந்த வகை தீ பாதுகாப்புச் சாதனங்கள் மற்றும் அவசரகால குழுக்கள் தேவை என்பதை வரையறுக்கும் அதிகாரமும் இந்தப் படைக்கு இருக்கும்.

